கர்ப்பிணி மனைவியை தாக்கிய போதை கணவர்.. திருவொற்றியூரில் பரபரப்பு..
சென்னை திருவொற்றியூரில் ஸ்கேன் செய்ய காத்திருந்த கர்ப்பிணி மனைவியை, குடிபோதையில் இருந்த கணவர் பலரது முன்னிலையில் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் வசித்து வருபவர்கள் மனோஜ் குமார் - சாவித்திரி தம்பதி. சாவித்திரி 7 மாத கர்ப்பிணியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சாவித்திரி மருத்துவ பரிசோதனைக்காக திருவொற்றியூரில் உள்ள மாநகராட்சி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள ஸ்கேன் மையத்திற்கு காலையிலேயே சென்று இருக்கிறார். அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால் மதியம் 3 மணி வரை அவர் அங்கேயே காத்திருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது மதுபோதையில் வீட்டிற்கு வந்த மனோஜ் குமார் நீண்ட நேரம் ஆகியும் மனைவி வராததால் மருத்துவமனைக்கு தேடி சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மனைவியை கர்ப்பிணி என்றும் பாராமல் போதையில் இருந்த மனோஜ் குமார் பலரது முன்னிலையில் தாக்கிய உள்ளார். இதனையடுத்து அங்கிருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் தடுக்க முற்பட்டபோது ஆபாசமான வார்த்தைகளில் அவர் திட்டியதாக கூறப்படுகிறது. பின்னர் தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த போலீசாரிடமும் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். இந்த சம்பவத்தை மருத்துவமனையில் இருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளனர்.