வீடியோ காலில் பேசி விட்டு மனைவி தற்கொலை! இதையறிந்த கணவனும் தற்கொலை
சிதம்பரம் அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மனைவி இறந்ததை அறிந்த வெளிநாட்டில் இருந்த கணவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
சிதம்பரம் அருகே உள்ள அத்தியாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (35). இவர் சிங்கப்பூர் நாட்டில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி கௌரி(28). இவர்களுக்கு திருமணம் ஆகி சுமார் 5 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தையும், 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் நேற்று கெளரி வீட்டில் உள்ள அறையில் புடவையால் தூக்கிட்டுள்ளார். இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சத்திரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கௌரி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து புதுச்சத்திரம் போலீசார் சம்பவ கிராமத்திற்கு சென்று உயிரிழந்த கௌரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கௌரி எதற்காக இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் மனைவி இறந்ததை அறிந்த சிங்கப்பூரில் இருந்த பன்னீர்செல்வம் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் சிதம்பரம் சப் கலெக்டர் ரஷ்மிராணி சிதம்பரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த கௌரியின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். பன்னீர்செல்வத்தின் உடல் வெளிநாட்டிலிருந்து நாளை வர உள்ளதால், அதன் பிறகே கௌரியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என கெளரியின் உறவினர்கள் தெரிவித்தனர். இதனால் இன்று கௌரியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை. இது பற்றி கூறிய கௌரியின் உறவினர்கள், அடிக்கடி கணவன் மனைவி இடையே சண்டை வரும். அதனால் சிறிது காலம் கௌரி தாய் வீட்டில் இருந்ததாகவும், பின்னர் சில மாதங்களுக்கு முன்புதான் அத்தியாநல்லூர் கிராமத்திற்கு வந்ததாகவும் கூறியவர்கள், தற்போது திடீரென இறந்து விட்டதாக தெரிவித்தனர். எதற்காக இறந்தார் என்பது தெரியவில்லை என கூறினார்கள். குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி இறந்ததும், அதை அறிந்த அவரது கணவர் வெளிநாட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் இவர்களது உறவினர்கள் மற்றும் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.