பொங்கல் பரிசு டோக்கன் பெறுவது எப்படி?
2025ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி சிறப்பு பரிசுத் தொகுப்பு ஒன்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு அறிவித்துள்ளது.
பரிசுத் தொகுப்பு என்றாலே ரொக்கம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்படும். முன்னதாக 1,000 ரூபாயில் தொடங்கி 2,500 ரூபாய் வரை பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்பட்டிருக்கிறது. எனவே நடப்பாண்டும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் ரொக்கம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி முந்திரி, பாசி பருப்பு, உலர் திராட்சை உள்ளிட்ட பொருட்களும் இல்லை. இதுதவிர இலவச வேட்டி, சேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு ஆகியவை மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது பொதுமக்கள் மத்தியில் ஏமாற்றம் அளித்தது. கடைசி நேரத்தில் ஏதாவது அறிவிப்புகள் வெளியாகலாம் எனக் காத்திருந்தனர்.
ஆனால் இயற்கை பேரிடர்கள், அதனை சமாளிக்கும் வகையிலான நிதி ஒதுக்கீடு போன்ற விஷயங்களால் நடப்பாண்டு சாத்தியமில்லை என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார். இந்த சூழலில் தான் பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் விநியோகம் இன்று (ஜனவரி 3) தொடங்குகிறது. இதை எப்படி பெறுவது என்று குடும்ப அட்டைதாரர்கள் யோசிக்கக் கூடும். இதற்காக தமிழக அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
‘‘ஜனவரி 3-ம் தேதி முதல் ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வீடு வீடாக டோக்கன் விநியோகம் செய்யப்படும். பரிசு தொகுப்பை பெறுவதற்கான நாள், நேரம் ஆகிய விவரங்கள் டோக்கனில் இடம்பெற்றிருக்கும். தினமும் காலையில் 100 பேர், பிற்பகலில் 100 பேர் பெறும் வகையில் டோக்கன் விநியோகம் செய்யப்படும்’’ என்று கூட்டுறவு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, அனைத்து மண்டல இணை பதிவாளர்கள், சென்னை மண்டல கூடுதல் பதிவாளருக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் என்.சுப்பையன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: 2025 தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.21 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க அரசு உத்தரவிட்டு, ரூ.249.75 கோடி ஒதுக்கியுள்ளது.