பேங்க் பக்கமே போனது இல்ல நாங்க எப்படி 23 லட்சத்துக்கு கடன் வாங்கியிருப்போம்? வீட்டுக்கு வந்த நோட்டீசால் ஷாக்

 
பேங்க்

வங்கிபக்கமே வராதவருக்கு ரூபாய் 23 லட்சத்திற்கு போலியான நகை அடமானம் வைத்து கடன் பெற்றதாக வழக்கறிஞர் மூலம் வங்கி நோட்டீஸ் அனுப்பியதால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

சிவகாசி சிவகாமிபுரம் காலனியைச் சேர்ந்த பட்டாசு தொழிலாளர்களான  ராமு- முத்துலட்சுமி தம்பதியினர் மகன் செல்வம் (வயது 33). இவருக்கும் விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன்- பாண்டியம்மாள் தம்பதியினரின் மகள் பீலாவுக்கும் திருமண மாகி 6 வயதில் மகளும், 3வயதில் மகனும் உள்ளனர். மாரியப்பன் கட்டிட தொழிலாளி. பாண்டியம்மாள் ஹோட்டல் தொழிலாளி. பீலா விருதுநகர் அரசு மருத்துவமனையில் தற்காலிக துப்புரவு தொழிலாளி. செல்வம் கடந்த சில வருடங்களாக விருதுநகர் அல்லம்பட்டியில்  தனது மாமனார் வீட்டில் குடும்பத்துடன் தங்கி,  மாமனார் மாரியப்பனுடன் கட்டிட வேலைக்கு சென்று வருகிறார். 

இந்நிலையில் சிவகாசி பேருந்து நிலையம் அருகே காந்தி சாலையி லுள்ள வங்கியில் (அரசுடைமை யாக்கப்பட்ட யூனியன் பாங்க்) செல்வம் 4- கடன் தொகை எண்கள் மூலமாக  நகையை அடமானம் வைத்து, அதுவும் போலியான நகைகளை கொடுத்து ரூபாய் 23 லட்சத்து 90 ஆயிரம் ரொக்கப் பணம் பெற்றதாகவும், அந்த பணத்தை உடனடியாக திரும்ப கட்ட வேண்டும் எனவும், முன்னெச்சரிக்கை அறிவிப்பு நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த செல்வம் குடும்பத்தினர் வங்கிக்கு நேரடியாக வந்து அங்கிருந்த அலுவலர்களிடம் வங்கியிலிருந்து வந்த நோட்டீஸ் குறித்து விளக்கம் கேட்டனர். வங்கி அலுவலர்கள் செல்வம் போலியான நகைகளை கொடுத்து ரூபாய் 23 லட்சம் நகைக்கடன் பெற்றுள்ளதாகவும், அந்த பணத்தை உடனடியாக திரும்ப செலுத்துமாறும் வலியுறுத்தியுள்ளனர். 

வங்கி பக்கமே வராத தங்கள் குடும்பத்தாருக்கு எப்படி? இது போன்ற முன்னறிவிப்பு நோட்டீஸ் வங்கியிலி ருந்தும், வங்கி சார்ந்த வழக்கறிஞர்களிடமிருந்தும் வந்தது என திக்கு தெரியாமல் விழி பிதுங்கி முழிக்கும்  செல்வம் குடும்பத்தார், அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தும் தங்களிடம் தங்க நகையும் கிடையாது. போலியான நகையை வைத்து தாங்கள் பெரிய அளவிலான தொகை பணத்தையும் பெறவில்லை எனவும் தெரிவித்து, இதில் காவல்துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்கள் விசாரணை நடத்தி தங்களுக்கு நியாயம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.


கடந்த மார்ச் மாதம் இதே வங்கியில் ரூபாய் 7 கோடியே 56 லட்சத்திற்கு ,56 நபர்களின் பெயர்களில், 126 நகை கடன் எண்கள் எண்ணிக்கையில் போலியான தங்க நகைகளை அடமானம் வைத்து மோசடி செய்துள்ளதாக, தூத்துக்குடி மாவட்டம் சிவலார்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த சிவகாசி பேருந்து நிலையம் பின்புறம் காந்தி சாலையில் நகைக் கடை நடத்தி வரும் பாலசுந்தரம் மற்றும் யூனியன் வங்கி சிவகாசி கிளையின் நகை மதிப்பீட்டாளர் முத்துமணி ஆகிய இருவர் மீதும் வங்கியின் பிராந்திய மேலாளர் ரஞ்சித் சிவகாசி நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் விசாரணையில் நிலுவையில் உள்ளதெ ன்பது குறிப்பிடத்தக்கது.