சென்னையில் அபாயகரமான நாய்கள் வளர்ப்போரின் வீடு முற்றுகை

 
போராட்டம்

மதுரவாயல் பகுதியில் அபாயகரமான நாய்கள் வளர்க்கும் நபரின் வீட்டை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்தினர்.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை நாய்கள் கடித்த விவகாரம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உரிய ஆவணங்கள் இன்றியும், அபாயகரமான நாய்களை வளர்ப்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை செய்துள்ளது. அதுமட்டுமின்றி ஆபத்தான நாய்கள் வளர்பவர்களைக் கண்டால் 1913 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் எனவும் மாநகராட்சி அறிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னை மதுரவாயல் பகுதியில் ஜான்சன் என்பவர் ஜெர்மன் ஜெப்பர்ட் உள்ளிட்ட 5 வகை வெளிநாட்டு இன நாய்களை சட்டவிரோதமாக வளர்த்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அவர் வளர்க்கும் நாய்கள் அபாயகரமானவை என்றும், அவைகள் இரவு நேரத்தில் அதீத சத்தத்துடன்  குரைப்பதால் சிறியவர் முதல் முதியவர் வரை கடும் அவதிப்படுவதாக மக்கள் குற்றம்சாட்டினர். நாய்களை வளர்த்து இனப்பெருக்கம் செய்து அவற்றை விற்பனை செய்வதாக கூறினார். நூற்றுக்கணக்கான மக்கள் வசிக்கும் தங்கள் பகுதியில் இதுபோன்ற நாய்களை வளர்க்கக்கூடாது எனவும், அந்த நாய்கள் குழந்தைகளை கடிக்கும் அபாயம் இருப்பதாகவும் மக்கள் அச்சம் தெரிவித்தனர். 

அதுமட்டுமின்றி நாய்களை வளர்க்கும் ஜான்சனின் வீட்டை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நாய்கள் வளர்ப்பு குறித்து புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துவிட்டு சென்றனர்.