நள்ளிரவில் பயங்கரம்..! எம்.பி., அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு..!
காரைக்குடி சுப்பிரமணியபுரம் முதல் வீதியில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோரின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இன்று காலை கட்சியினர் வந்து அலுவலகத்தை திறந்த போது, பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதையறிந்து, காரைக்குடி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ மாங்குடி மற்றும் கட்சியினர் உடனே நேரில் வந்து பார்வையிட்டனர். பின்னர், இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சிவகங்கை மாவட்ட எஸ்பி சிவபிரசாத் நேரில் வந்து ஆய்வு செய்தார்.
எம்பி அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா எதுவும் இல்லாததால், அருகே இருக்கும் மற்ற கட்டடங்களில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், பெட்ரோல் குண்டு வீசியவர்கள் யாராக இருக்கும்? என்ன காரணத்திற்காக இந்த செயலை செய்தார்கள் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

