இன்றும், நாளையும் 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!! - மாவட்ட ஆட்சியர்கள் முக்கிய அறிவிப்பு..
இன்று (திங்கட்கிழமை) மற்றும் நாளை (செவ்வாய்க்கிழமை) பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்து இரு மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கையொட்டி தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (ஜூலை 7 ஆம் தேதி - திங்கட்கிழமை) ஒருநாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. எனினும், 07.07.2025 அன்று அரசு தேர்வுகள் ஏதேனும் அறிவிக்கப்பட்டிருப்பின் சம்பந்தப்பட்ட மாணவ / மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்கும் இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்த விடுமுறை நாளுக்கு மாற்றாக 19.7.2025 அன்று வேலை நாளாக செயல்படும் என்றும் அதுகுறித்து பின்னர் அறிவிக்கப்படும்” என்றும் தெரிவித்துள்ளார்.

இதேபோல் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயில் தேர் திருவிழா நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை (08.07.2025) அன்று நடைபெறுவதை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை (Local Holiday) நாளாக அறிவிக்கப்படுகிறது.
மேலும், அந்த நாளில் அரசு பொதுத் தேர்வுகள் ஏதுமிருப்பின் பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகள், பொதுத் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது.

அதன்படி 08.072025 உள்ளூர் விடுமுறை நாளன்று நடத்தப்படும் அரசு பொதுத் தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதலுமின்றி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இந்த உள்ளூர் விடுமுறையானது செலாவணி முறிச் சட்டம் 1881 (Under Negotiable Instrument Act 1881)-இன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது.
அதன்படி மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அரசு காப்புகள் (Government Securities) தொடர்பாக அவசரப் பணிகளை கவனிப்பதற்காக செயல்படும். இந்நிலையில், இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமை (19.07.2025) அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது” என்றும் அறிவித்துள்ளார்.


