நாளை கோவில் திறப்பு : ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் வரலாற்று சிறப்புமிக்க கோவில்..!

 
1 1

ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும், வரலாற்று பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில், 9ம் தேதி திறக்கப்படுகிறது. 23ம் தேதி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.


கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் நகரம் 'ஏழைகளின் ஊட்டி' என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது. இந்த நகரத்தில் அமைந்திருக்கும் ஹாசனாம்பா கோயிலின் காரணமாகவே இந்நகரத்துக்கு ஹாசன் என்று பெயர் வந்தது. இக்கோயில் ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் மட்டுமே பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்காக திறந்துவிடப்படுகிறது.

ஹாசனாம்பா கோயில் 12-ஆம் நூற்றாண்டில் கிருஷ்ணப்ப நாயக்கரால் கட்டப்பட்டது. இந்த கோயில் பாம்பு புற்று வடிவத்தில் கட்டப்பட்டிருப்பதொடு, கர்நாடக கட்டிடக்கலையின் சிறந்த உதாரணமாகவும் திகழ்கிறது. இது கட்டப்பட்ட பிறகே ஹாசன் நகரம் அப்பெயரை பெற்றதாக சொல்லப்படுகிறது. அதாவது அதற்கு முன்பு சிம்ஹாசனபுரி என்று அழைக்கப்பட்டு வந்த ஹாசன் நகரம் ஹாசனாம்பாவின் (சப்த கன்னியர்கள்) வருகைக்கு பிறகு ஹாசன் என்று அழைக்கப்படலாயிற்று.

புராணக் கூற்றின் படி சப்த (ஏழு) கன்னியர்களான பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி ஆகியோர் காசியிலிருந்து ஹாசன் நகரத்துக்கு வந்துள்ளனர். அதன் பின்னர் 3 கன்னியர் புற்று  வடிவிலும், கெஞ்சம்மா என்ற பெயரில் கோட்டையாக ஒருவரும், தேவகரே என்ற குளத்தினடியில் மூன்று கிணறுகளாக 3 கன்னியர்களும் கோயில் மற்றும் அதைச் சுற்றிலும் தங்கி ஹாசன் நகர மக்களுக்கு அருள் பாலித்து வருவதாக நம்பப்படுகிறது. 

ஹாசனாம்பா கோயில் ஒவ்வொரு ஆண்டும் தளவார் குடும்பத்தினர் கோயில் நுழைவாயிலில் கட்டப்பட்டிருக்கும் வாழை மரத்தை வெட்டிய பிறகு திறந்துவிடப்படுகிறது.

வினோத நம்பிக்கைகள் : 

மாமியார்-மருமகள் கல்! : 

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஹாசனாம்பா கோயிலுக்கு நாள் தவறாமல் வந்து வழிபட்டு கொண்டிருந்திருக்கிறாள் ஒரு பெண். ஒருநாள் அவளை தொடர்ந்து வந்த அவளின் மாமியார் ''வீட்டில் வேலை செய்யாமல் இங்கென்ன செய்கிறாய்'' என்று சொல்லி அப்பெண்ணை அடித்திருக்கிறாள். அப்போது அப்பெண் வலியால் சத்தமிடவே அம்மன் அவள் முன்பு பிரசன்னமாகி அவளை கல்லாக மாற்றிவிட்டாள் என்று சொல்லப்படுகிறது. அந்த கல்தான் தற்போது மாமியார்-மருமகள் கல் என்ற பெயரில் கோயிலில் காணப்படுகிறது. இந்த கல் ஆண்டுதோறும் அரிசி அளவு அம்மன் விக்ரகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறதாம். அதோடு இது நகர்ந்து நகர்ந்து அம்மன் விக்ரகத்தை அடைந்துவிட்டால் இந்த கலியுகம் அழிந்துவிடும் என்று நம்பப்படுகிறது.

திருடர்கள் கோயில் : 

ஹாசனாம்பா கோயிலில் ஒருமுறை அம்மன் ஆபரணங்களை திருடிச்செல்ல நான்கு திருடர்கள் வந்துள்ளார். இதனால் கோபமடைந்த அம்மன் அவர்களை கல்லாக போகுமாறு சபித்ததாக சொல்லப்படுகிறது. அந்த நால்வரின் கற்சிலைகள் தனிக்கோயிலாக 'திருடர்கள் கோயில்' என்ற பெயரில் ஹாசனாம்பா கோயில் வளாகத்தினுள்ளேயே அமைந்திருகிறது. 

அணையா தீபம் : 

ஹாசனாம்பா கோயில் ஒவ்வொரு ஆண்டும் மூடப்படும் நாளான பலி பட்யாமி என்ற தினத்தில்  கோயிலில் தீபம் ஏற்றப்படுகிறது. இந்த தீபமானது அடுத்த ஆண்டு கோயில் திறக்கப்படும் நாள் வரை அணையாமல் எரிந்துகொண்டிருக்குமாம்.

கோயிலுக்குள் குழந்தை மாட்டிக்கொண்டால்?! :

கோயில் மூடப்படும் நாளில் தவறுதலாக குழந்தை ஏதும் உள்ளே மாட்டிக்கொண்டால் மீண்டும் கோயில் திறக்கப்படும் நாள் வரை அந்த குழந்தை உயிருக்கு ஆபத்தில்லாமல் நலமுடன் இருக்கும் என்று நம்பப்படுகிறது. 

வாடா மலர்கள் : 

ஹாசனாம்பா கோயில் மூடப்படும் இறுதி நாளில் அம்மனுக்கு அர்ச்சனை செய்யப்படும் பூக்கள், மாலையிடப்படும் பூக்கள் எல்லாம் அடுத்த ஆண்டு வரை வாடாமல் இருக்குமென்றும் பக்தர்கள் நம்புகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இந்த அதிசயத்தை பார்ப்பதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான பக்தர்கள் கோயில் திறக்கப்படும் நாளில் கோயிலுக்கு வருகிறார்கள். அதோடு ஹாசன் மாவட்ட கருவூலத்திலிருந்து எடுத்துவரப்படும் ஆபரணங்கள் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்படும். அதன்பிறகு அம்மன் நகைகள் 10 நாட்களின் முடிவில் மீண்டும் கருவூலத்துக்கே எடுத்துச்செல்லப்படுகின்றன.
 
இந்த சமயங்களில் கோயிலில் பெருங்கூட்டம் காணப்படுவதால் சிறப்பு தரிசனம் செய்ய 250 ரூபாய்க்கு தனி வழி பக்தர்களின் வசதிக்காக ஏற்பாடு செய்யப்படுகிறது. ஹாசனாம்பா கோயில் ஹாசன் நகர மையத்திலேயே அமைந்திருக்கிறது. அதோடு பெங்களூரிலிருந்து 184 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹாசன் நகரத்துக்கு பெங்களூரிலிருந்து எண்ணற்ற அரசு பேருந்துகள் (KSRTC) இயக்கப்படுகின்றன.


இதுதொடர்பாக, கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை:
இம்முறை ஹாசனாம்பா உத்சவம் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இதற்கான முன்னேற்பாடுகள் நடக்கின்றன. ஹாசனாம்பாவை தரிசிப்பதுடன், சுற்றுலா பேக்கேஜ், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். வரும் 9ம் தேதி கோவில் நடை திறக்கப்படும். 23ம் தேதி வரை ஹாசனாம்பாவை தரிசிக்க அனுமதி இருக்கும்.


கோவில் உத்சவம் குறித்து, மாவட்ட பொறுப்பு அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா , மாவட்ட கலெக்டர் லதா குமாரி ஏற்கனவே ஆலோசனை நடத்தி, உத்தரவுகள் பிறப்பித்துள்ளனர். கோவிலுக்கு பெயின்ட் அடிக்கும் பணிகள் நடக்கின்றன. அழைப்பிதழ் அச்சிடப்படுகின்றன.ஹாசன் நகர் முழுவதும், மின் விளக்கு அலங்காரம், எல்.இ.டி., திரைகள்பொருத்துவது,சாலைப் பள்ளங்களை மூடுவது, கழிப்பறைகள் கட்டுவது, குடிநீர் வசதி, பேரிகேட் பொருத்துவது என, அனைத்துப் பணிகளும் மும்முரமாக நடக்கின்றன. கடந்தாண்டு 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஹாசனாம்பாவை தரிசிக்க வந்தனர். இம்முறை எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கிறோம்.

சிறப்பு தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு 300, 1,000 ரூபாய் பாஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. இப்போது தான் முதன் முறையாக, வி.ஐ.பி., மற்றும் வி.வி.ஐ.பி., பாஸ்கள் ரத்து செய்யப்பட்டு, கோல்டு பாஸ் நடைமுறை கொண்டு வரப்படுகிறது. ஒரு பாஸில் ஒருவர் மட்டுமே, ஹாசனாம்பிகாவை தரிசிக்க அனுமதிக்கப்படுவர்.கோவிலுக்கு வரும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளை நேரடியாக தரிசனத்துக்கு அழைத்துச் செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது. நீண்டநேரம் வரிசையில் வரும் பக்தர்களின் வசதிக்காக, மின் விசிறி, மூலஸ்தானம் முன், ஏ.சி., வசதி செய்யப்படுகிறது.குடிநீர், மோர் வழங்கப்படும். கோவில் உட்புறமும், வெளிப்புறமும் அழகாக பூ அலங்காரம் செய்யப்படுகிறது. முதல் நாளன்று ஹாசனாம்பாவை தரிசிக்க அனுமதி இருக்காது. நடைதிறந்த பின், துப்புரவு செய்யப்படும். மறுநாள் அதிகாலை 5:00 மணி முதல், தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். பக்தர்களின் பாதுகாப்புக்காக, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. பலத்த போலீஸ் பாதுகாப்பும் இருக்கும்.