நிதி நிறுவன மோசடி வழக்கு- தேவநாதன் யாதவ் முழு சொத்து விவரங்களை தாக்கல் ஐகோர்ட் உத்தரவு
நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ் முழு சொத்து விவரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நூற்றுக்கு மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக அந்நிதி நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் யாதவ் உள்பட 6 பேரை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி தேவநாதன் உள்பட 3 பேர் தாக்கல் செய்த மனுக்களை இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்த நிலையில், மூன்றாவது முறையாக மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு மீண்டும் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, முதலீட்டாளர்கள் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் திருமூர்த்தி, தேவநாத யாதவ் 680 கோடி ரூபாய் முதலீட்டாளர்களிடம் ஏமாற்றி உள்ளதாகவும், சென்னை அண்னா சாலை, மயிலாப்பூர், அண்ணா நகர் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட இடங்களில் சொத்துகள் உள்ளதகாவும் அதற்கான ஆதரங்கள் தன்னிடம் உள்ளதாகவும், இதையெல்லாம் மறைத்து அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி தேவநாத யாதவின் முழு சொத்து விவரங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை 17ம் தேதிக்கு தள்ளிவைத்தார். மேலும், குறைந்தபட்சம் 300 கோடி சொத்து மதிப்பையாவது அன்றைய தினம் காட்டினால், ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கபடும் என தெரிவித்தார்.


