இளையராஜா தொடர்ந்த வழக்கில் வனிதா விஜயகுமார் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
இளையராஜா தொடர்ந்த வழக்கில் நடிகை வனிதா விஜயகுமார் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை வனிதா விஜயகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. வனிதா இயக்கத்தில் அவரது மகள் ஜோவிகா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் ராபர்ட் மாஸ்டர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் போஸ்டர்கள் தொடங்கி அனைத்து புரமோஷன்களையும் வித்தியாசமான முறையில் வெளியிட்டு வந்த படக்குழு, படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்து வந்தனர். படம் ரொமாண்டிக் காதல் கதைக்களத்தை கொண்டது என கூறப்படுகிறது. வனிதா விஜயகுமாரின் ‘மிஸஸ் & மிஸ்டர்’ படத்தில் தன் அனுமதி இல்லாமல் தனது பாடலை பயன்படுத்தியதாக இசைஞானி இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார். மைக்கேல் மதன காமராஜா திரைப்படத்தில் இடம்பெற்ற ராத்திரி சிவ ராத்திரி பாடலை படத்தில் பயன்படுத்தியிருப்பதாகவும், அந்தப் பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் மனுவில் அவர் கோரிக்கை விடுத்து இருந்தார்.
இந்த வழக்கு செந்தில்குமார் ராமமூர்த்தியிடம் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இளையராஜா தரப்பில், மிசஸ் அண்ட் மிஸ்டர் படத்தில் அனுமதியின்றி தனது பாடலை பயன்படுத்தியதோடு, அந்தப் படத்தின் விளம்பரங்களில் தனது பெயரும் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே அதற்கும் தடை விதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது. இதனை கேட்ட நீதிபதி, நடிகை வனிதா விஜய்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘மிஸஸ் & மிஸ்டர்’திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடலை நீக்க கோரி இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கில் வனிதா விஜயகுமார் ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து விசாரணையை ஒத்திவைத்தார்.


