2 சுற்று முடிவுகள் நிலவரம் இதோ.. 11,000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை..

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 27ம் தேதி நடந்து முடிந்தநிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 வாக்குகள் பதிவாகியிருக்கிறது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி ஈரோடு சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் சரியாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது., வாக்கு எண்ணிக்கையானது 2 அறைகளில் 16 மேசைகள் அமைக்கப்பட்டு மொத்தம் 15 சுற்றுகளாக எண்ணப்பட உள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் , தற்போது வரை 2 சுற்றுகள் முடிவடைந்து முன்னிலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் வெளியாகி வரும் சூழலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். அதன்படி 11,000 க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலை பெற்றிருக்கிறார். 2 சுற்றுகள் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் 19,867 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 7,324 வாக்குகள் பெற்று 2வது இடத்திலும், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா 1,146 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்திலும் உள்ளனர். தேமுதிக சார்பில் போட்டியிட்ட ஆனந்த் 178 வாக்குகள் பெற்றுள்ளார்.