அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று தீர்ப்பு - கட்சி அலுவலகத்திற்கு பலத்த பாதுகாப்பு

 
admk office

அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளதை அடுத்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சகட்டத்தை எட்டியதை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் உட்பட அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், இதனை விசாரித்த தனி நீதிபதி பொதுக்குழு செல்லாது என்று தீர்ப்பு அளித்தார். இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, அ.தி.மு.க. சட்ட விதிகளுக்கு உட்பட்டே பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது என்று கூறி பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று உத்தரவிட்டனர்.

ops eps

இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஜனவரி மாதம் விசாரித்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஜனவரி 11-ந் தேதி ஒத்திவைத்தது. இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுக்குழு  வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. இந்த தீர்ப்பு தமிழக அரசியலில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இரட்டை இலை சின்னம் வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு வெற்றி கிடைத்த நிலையில், இந்த வழக்கில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. 

admk

இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஜூலை 11ம் தேதி பொதுக்குழு நடைபெறும் போது ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததால் அங்கு பெரும் வன்முறை ஏற்பட்டது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிமுக தலைமை அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.