தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்: 9 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!

 
rain school

தெற்கு உள் கர்நாடகா முதல் தென்மேற்கு வங்கக்கடல் வரை நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதையின் தாக்கம் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று (செப்டம்பர் 15) கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

நாளை (செப்டம்பர் 16) கோவை, நீலகிரி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 17ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் எனவும், தமிழகத்தின் பிற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 34–35 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26–27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.