ரிதன்யா மாமியார் சித்ராதேவியின் ஜாமின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு..
திருப்பூர் ரிதன்யா மாமியார் சித்ராதேவியின் ஜாமின் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூரைச் சேர்ந்த ரிதன்யா என்கிற இளம்பெண், வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். 300 சவரன் நகைகள் மற்றும் 75 லட்சம் ரூபாய் மதிப்பில் வரதட்சனை கொடுத்தும், மேலும் 200 சவரன் நகை வேண்டும் என கணவர் குடும்பத்தினர் ரிதன்யாவை கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் கோவிலுக்குச் சென்று வருவதாகக் கூறி காரில் சென்ற ரிதன்யா, அவிநாசி சாலையோரம் காரை நிறுத்திவிட்டு பூச்சிமந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ரிதன்யாவின் கணவர் கவின் குமார் மற்றும் மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கவின் குமார் மற்றும் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் நீதிமன்றத்தில் ஜாமின் வழங்கக்கோரி மனுதாக்கல் செய்துள்ளனர். அதேநேரம் ரிதன்யாவின் பெற்றோர் குடும்பத்தினர் தரப்பில், ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து ரிதன்யா தற்கொலை வழக்கில் , 3வது குற்றவாளியான அவரது மாமியார் சித்ரா தேவியை போலீஸார் கைது செய்தனர்.

இதனையடுத்து சித்ரா தேவி ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார். ஏற்கனவே கடந்த 7ம் தேதி கவின் குமார் மற்றும் ஈஸ்வரமூர்த்தியின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று ரிதன்யாவின் மாமியார் சித்ரா தேவியின் ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சித்ராதேவியின் ஜாமின் மனு மீதான விசாரணை நாளை மறுநாள் ( ஜூலை 11) நடைபெறும் என நீதிபதி தெரிவித்தார்.


