மாடியிலிருந்து தவறி விழுந்து தலைமை காவலர் உயிரிழப்பு
![Death](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/5ccea25d447be4111139a9afbfa150c0.png)
திருச்சியில் மாடியிலிருந்து தவறி விழுந்து தலைமை காவலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் சமயபுரம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தவர் மூர்த்தி (45), இவருக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு பெண் காவலருடன் திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக தனியாக பிரிந்து வாழ்கின்றனர். மூர்த்தி கம்பரசம்பேட்டை பகுதியில் வேறு ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் மூர்த்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமயபுரம் காவல் நிலையத்திற்கு மதுபோதையில் வந்துள்ளார். அப்போது காவல் உதவி ஆய்வாளரை தகாத வார்த்தையில் பேசி உள்ளார். இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு அடிப்படையில் அவரை மருத்துவ பரிசோதனை செய்து மது குடிக்காமல் வந்தால் தான் பணியில் சேர்த்துக்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மூர்த்தி நேற்று மது போதையில் இருந்துள்ளார். இன்று அதிகாலை வீட்டின் மாடிக்கு சென்ற அவர் மாடியிலிருந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பலியாகினார். இதுகுறித்து மூர்த்தியின் இரண்டாவது மனைவி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த ஜீயபுரம் போலீசார் மூர்த்தி உடலை மீட்டு பிரத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த தலைமை காவலர் மூர்த்தி மாடியில் இருந்து யாராவது தள்ளிவிட்டு கொலை செய்தார்களா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தவறி விழுந்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.