கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியருக்கு ஐகோர்ட் நிபந்தனை ஜாமீன்!

 
1

திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா நடனப் பள்ளி கல்லூரியில் கடந்த 1995 – 2001 வரையிலான காலகட்டத்தில் படித்த முன்னாள் மாணவி ஒருவர், முன்னாள் பேராசிரியரான ஸ்ரீஜித் கிருஷ்ணா தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக இ-மெயில் மூலமாக புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீஜித் கிருஷ்ணாவை கடந்த ஏப்.22 அன்று நீலாங்கரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஸ்ரீஜித் கிருஷ்ணா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி டி.வி. தமிழ்செல்வி முன்பாக நடந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், “28 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்ததாகக் கூறப்படும் இந்த விவகாரத்தில் தற்போது மருத்துவ ரீதியாக எதையும் நிரூபிக்க முடியாது. பல மாணவிகள் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் இந்த பெண்ணைத் தவிர வேறு யாரும் புகாரளிக்கவில்லை. மனுதாரருக்கு உள்ள நற்பெயரைக் கெடுக்கும் வகையில் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது” என வாதிட்டார்.

புகாரளித்த பெண் தரப்பில், “ஸ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு ஜாமீன் வழங்கினால் பாதிக்கப்பட்ட மற்ற பெண்கள் புகாரளிக்க முன்வரமாட்டார்கள்” என்றார். காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஸ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு எதிராக மற்றொரு பெண்ணும் புகாரளித்துள்ளார். இன்னும் சிலர் புகாரளிக்க உள்ளனர், எனவே, ஜாமீன் வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரரான ஸ்ரீஜித் கிருஷ்ணா,வெளிநாடு செல்வதாக இருந்தால் விசாரணை நீதிமன்றத்தில் உரிய முன்அனுமதி பெற வேண்டும், என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.