"தமிழகத்தை அடமானம் வைத்துவிட்டதா திமுக?" - மேகதாது விவகாரத்தில் அண்ணாமலை கடும் தாக்கு!
பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை;
தமிழக விவசாயிகளின் உயிர்நாடியான காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாது அணை கட்ட, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப் போவதாக, கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு, தனது நிதிநிலை அறிக்கையில் கூறியிருக்கிறது.
காங்கிரஸ் கட்சியுடனான தனது கூட்டணியை திமுக உறுதி செய்த அடுத்த தினமே, கர்நாடக காங்கிரஸ் அரசு இதனை அறிவித்திருப்பது, தனது கூட்டணிக்குள் காங்கிரஸ் கட்சியைத் தக்கவைக்க, திமுக அரசு, தமிழக மக்கள் நலனை அடமானம் வைத்திருப்பதை வெளிப்படையாக்கியிருக்கிறது.
தமிழகத்தின் உரிமையை காக்காமல் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு சாதகமாக திமுக அரசு நடப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. திமுகவின் நலனுக்காக, தமிழகத்தின் உரிமையைப் பலிகடா ஆக்க முடியாது. தமிழக மக்களின் நலனுக்கு திமுக செய்யும் துரோகம் இது. உடனடியாக, தனது கூட்டணிக் கட்சித் தலைவரான கர்நாடக காங்கிரஸ் முதல்வருடன் பேசி, மேகதாது திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியைக் கைவிட வலியுறுத்த வேண்டும் என்று, முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்,
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

