ஹேப்பி நியூஸ்...! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு நான்கு மாத அகவிலைப்படி உயர்வு..!

 
1 1

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விதி எண் 110-ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வையும் அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அரசுப் பணியாளர்களுக்கு அகவிலைப்படி 53%ல் இருந்து 55%ஆக உயர்ந்தது.

01-01-2025 முதல் 2 விழுக்காடு அகவிலைப்படியினை மத்திய அரசு அலுவலர்களுக்கு உயர்த்தி வழங்கிட அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், மாநில அரசுப் பணியாளர்களுக்கும் 01-01-2025 முதல் அகவிலைப்படி 2 விழுக்காடு உயர்த்தி வழங்கப்படுகிறது.

இந்த அகவிலைப்படி உயர்வால் சுமார் 16 லட்சம் தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இந்த உயர்வினை நடைமுறைப்படுத்திட ஆண்டு ஒன்றுக்கு 1252 கோடி ரூபாய் கூடுதல் நிதி செலவிடப்படும்.

இதற்கான அரசாணையையும் தமிழ்நாடு அரசு சமீபத்தில் வெளியிட்டது. தமிழ்நாடு அரசு முதன்மைச் செயலாளர் த. உதயச்சந்திரன் வெளியிட்ட அரசாணையில், முதலமைச்சர் மாநில அரசுப் பணியாளர்களுக்கு 53 சதவீதத்திலிருந்து 55 சதவீதமாக அகவிலைப்படியை 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்ததன் அடிப்படையில், அகவிலைப்படி இரண்டு சதவீதம் உயர்த்தி அரசாணை வெளியிடப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பின் அடிப்படையில், ஜனவரி மாதம் முதல் கணக்கிடப்பட்டு கடந்த நான்கு மாத அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகை இம்மாத ஊதியத்துடனும், ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியத்துடனும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.