உலக செவிலியர் தினம் - வைகோ வாழ்த்து..

 
vaiko ttn


உலக செவிலியர் தினத்தையொட்டி மதிமுக பொதுச்செயலாளர்  வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு, தாய்க்கு நிகரான அன்பும் பரிவும் கொண்டு, பொறுமையுடன் ஆற்றும் அரும்பணிதான் செவிலியர் பணி ஆகும். 1820 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் நாள், இங்கிலாந்தில், செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில்   புளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்தார். இறை அருளால் தனக்கு இடப்பட்ட ஆணையாக, செவிலியர் பணியில் தன்னை ஒப்படைத்துக் கொண்டார். இப்பணியில் வழிகாட்டு நெறிகளை உருவாக்கி, அறத்தொண்டில் ஆர்வம் கொண்டவர்களை ஒருங்கிணைத்து, செவிலியர் பயிற்சிப் பள்ளியைத் தொடங்கினார்.  

nurse

போர்க்களங்களில் காயங்கள் அடைந்து, இரவு நேரங்களில் வலி தாங்க முடியாமல் வீரர்கள் அலறித் துடித்துக் கொண்டு இருந்தார்கள். கையில் லாந்தர் விளக்கை எடுத்துக்கொண்டு, அவர்களைத் தேடி ஆறுதல் கூறி. தேவையான மருந்துகளை வழங்கி, கவலையைப் போக்கி விரைந்து நலம் பெறச் செய்தார்.  தங்களைக் காக்க, விண்ணுலகில் இருந்து மண் உலகிற்கு கையில் விளக்குடன் தேவதை வந்திருக்கின்றார் என்று வீரர்கள் மகிழ்ந்தார்கள்.

புளோரன்ஸ்  நைட்டிங்கேல் அவர்களுக்கு நன்றி கூறும் விதமாக, அவர் பிறந்த மே 12-ஆம் நாள், லண்டனில் உள்ள  வெஸ்ட்மின்ஸ்டர் அபே மாளிகையில் விளக்குக்கு ஒளி ஏற்றி, செவிலியர்கள் ஒவ்வொருவராலும் கை மாற்றப்பட்டு, மாளிகையின் உயர்ந்த பீடத்தில் வைக்கப்படுகின்றது. ஒருவரிலிருந்து மற்றொருவருக்கு தமது அறிவையும், அனுபவத்தையும், மனிதநேயத்தையும் தோள் மாற்றம் செய்வதன் அடையாளம் இது ஆகும். நோயாளிகளைக் காப்பாற்ற மருந்து  இருந்தால் மட்டும் போதாது. நோயின் தன்மை அறிந்து, நோயாளிகளைத் தேற்றும் தாய் உள்ளம் வேண்டும். எனவே செவிலியர்கள் தாய்க்கு நிகரானவர்கள். தற்போது ஆண் செவிலியர்களும் இப்பணியில் இருக்கிறார்கள்.  

உலக செவிலியர் தினம் - வைகோ வாழ்த்து..

தமிழ்நாட்டின் மக்கள் தொகை அடிப்படையில், அனைத்துத் தரப்பினருக்கும் சிறந்த முறையில் மருத்துவம் கிடைத்திட, உலக சுகாதார நிறுவனம் மற்றும் இந்திய நர்சிங் கவுன்சில் வழிகாட்டுதல்களின் அடிப்படையில், தேவையான செவிலியர் பணி இடங்களை நிரப்பிட தமிழக அரசு முன்வர வேண்டும். புனிதமான சேவையில் ஈடுபட்டுள்ள செவிலியர்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்  செவிலியர் நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.