மருத்துவ கழிவுகள் குறித்து பினராயி விஜயனிடம் பேசுவாரா ஸ்டாலின்? - ஹெச்.ராஜா சரமாரி கேள்வி

 
h.raja h.raja

தமிழகத்திற்கு வருகை தந்திருக்கிற கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் மருத்துவ கழிவுகள் கொட்டப்படும் விவகாரம் குறித்தும், முல்லை பெரியாறு அணை விவகாரம் குறித்தும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுவாரா? என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்திற்கு வருகை தந்திருக்கிற கேரள மாநில முதல்வர் திரு.பினராயி விஜயன் அவர்களிடம் கேரள மாநிலத்தில் இருந்து மருத்துவக் கழிவுகளை கொண்டு வந்து தமிழகத்திற்குள் கொட்டாதீர்கள் என்றும், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முடிவை கைவிடுங்கள் என்றும், தமிழகத்தில் உற்பத்தியாகும் காய்கறிகள் மற்றும் உணவுப்பொருட்களை நாங்கள் சகோதரத்துவ உணர்வோடு கேரள மாநிலத்திற்கு வழங்கி வருகிறோம். அதுபோல் கேரளாவில் ஆண்டுதோறும் கடலில் வீணாகக் கலக்கும் 2000 டிஎம்சி தண்ணீரில் ஒரு 200 டிஎம்சி தண்ணீரை நீங்கள் சகோதரத்துவ உணர்வோடு தமிழகத்திற்கு வழங்க முன் வாருங்கள் என்றும் தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வலியுறுத்துவாரா?
தமிழகத்தின் நலன் மீது உண்மையிலேயே தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அக்கறை இருக்குமானால் மேலே நாம் குறிப்பிட்டுள்ள விஷயங்களை , கேரள மாநில முதல்வர் திரு.பினராயி விஜயன் அவர்களிடம் நிச்சயம் அவர் வலியுறுத்தவார், அதுகுறித்துப் பேசி இரு மாநிலங்களுக்கும் இடையே இருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண இரு மாநில உறவுகளை மேம்படுத்த முயற்சி எடுப்பார் என எதிர்பார்க்கலாம். தமிழகத்தின் நலன் மீது தமிழக முதல்வருக்கு எந்த அளவிற்கு அக்கறை இருக்கிறது என்பதை நாம் பொருத்திருந்து பார்க்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.