ஜிஎஸ்டி தொடர்பாக ஜி.வி.பிரகாஷ் தொடர்ந்த வழக்கு - வருமான வரித்துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு..

இசைப் படைப்புகளுக்கு வரி செலுத்தக்கோரிய நோட்டீஸை எதிர்த்து பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவுக்கு வருமான வரித் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இசைப் படைப்புகளுக்கு 1 கோடியே 84 லட்சம் ரூபாய் சேவை வரி செலுத்தக்கோரி பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு, ஜிஎஸ்டி ஆணையர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இந்த நோட்டீஸை எதிர்த்து ஜி.வி.பிரகாஷ் குமார், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, 4 வாரங்களில் நோட்டீஸுக்கு பதிலளிக்குமாறு ஜி.வி.பிரகாஷுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து ஜி.வி.பிரகாஷ்குமார், மீண்டும் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "இசைப் படைப்புகளின் காப்புரிமை, பட தயாரிப்பாளர்களுக்கு நிரந்தரமாக வழங்கிய பின், அதன் உரிமையாளர்கள் அவர்கள் தான். எனவே, தன்னிடம் வரி வசூலிப்பது சட்ட விரோதம்" என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபிக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்ததது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு 4 வாரங்களில் வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.