முதல்வரின் அதிகாரத்தில் தலையிடும் ஆளுநர் தமிழிசை - நாராயணசாமி குற்றச்சாட்டு..
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் அதிகாரத்தில் அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தலையிடுவதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
புதுச்சேரி மாநில முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வந்தார். ரோப்கார் மூலம் மலைக்கோயிலுக்குச் சென்று சாயரட்சையின்போது தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்துவிட்டு, பின்னர் மலையடிவாரத்திற்கு வந்து ஓய்வெடுத்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேடியளித்த அவர், “ கர்நாடகத்தில் முத்தான திட்டங்களை அறிவித்ததின் மூலம் காங்கிரஸ் வெற்றி பெற்றது. பா.ஜனதாவை மக்கள் நம்ப தயாராக இல்லை. இனி நடைபெற உள்ள அனைத்து தேர்தல்களிலும் பா.ஜ.க. தோல்வியையே சந்திக்கும். விழுப்புரம் பகுதியில் விஷ சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக சென்று பார்த்தது பாராட்டுக்குறியது.
வழக்கில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்சாராயம் தயாரிக்க மெத்தனால் புதுச்சேரியில் இருந்துதான் கொண்டு வரப்படுகிறது. புதுச்சேரியில் கடந்த 1½ ஆண்டுகளாக கள்ளச்சாராயம் அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் கலால்துறையில் ஊழல் அதிகரித்துள்ளது. இதில் அம்மாநில முதல்வர் நடவடிக்கை எடுக்க வில்லை. கள்ளச்சாரயம், சட்ட ஒழுங்கு பிரச்சினைக்காக போராட்டம் நடத்த உள்ளோம். கவர்னர் தமிழிசை முதலமைச்சர் அதிகாரத்தை கையில் எடுத்துள்ளார். அவரின் கைப்பொம்மையாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி செயல்படுகிறார். மாநிலத்தில் தொழில் வளம் முதல் எந்த வளமும் மேம்படுத்தப்படவில்லை” என்று குறிப்பிட்டார்.