இரண்டு மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல்..!! மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி..
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழக சட்டபேரவையில் கடந்த ஏப்ரல் 16ம் தேதி தமிழக நகர்ப்புறம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் வகையிலான 2 சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்களின் முக்கிய அம்சம் என்னவென்றால், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல்களிலும் மாற்றுத்திறனாளிகள் போட்டியிடாமல் நேரடியாக நியமன முறையில் உறுப்பினராக ஆக்கப்படுவார்கள்.

இதன் மூலமாக உள்ளாட்சி அமைப்புகளில், மாற்றுத் திறனாளிகளுடைய பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட்டு, அவர்கள் தங்களுக்கான வாய்ப்புகளையும், சிறப்புரிமைகளையும் சமமாகப் பெறுவதற்கு இந்தச் சட்டமுன்வடிவுகள் வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை ஆகிய துறைகளின் சார்பாக இரண்டு சட்டமுன்வடிவுகள் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னதாக அறிமுகப்படுத்தப்பட்டு, மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த இரு சட்ட மசோதாக்களுக்கும் தற்போது ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்ததை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் 14,000 மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கும் என அரசு தெரிவித்துள்ளது. நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் 650 மாற்றுத்திறனாளிகள், கிராமப் பஞ்சாயத்து 12,913, ஊராட்சி ஒன்றியம் 388, மாவட்ட ஊராட்சியில் 37 மாற்றுத்திறனாளிகள் நியமிக்கப்படுவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


