3 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மூன்று சட்டமசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

இதன்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் நிறைவடைந்த உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் பதவிக்காலத்தை மேலும் ஆறுமாத காலம் நீட்டிக்கும் சட்டமசோதா, தமிழ்நாடு ஊராட்சிகள் ஐந்தாம் திருத்தச் சட்டமசோதா, தமிழ்நாடு தொழிற்கல்வி நிலையங்களில் சேர்க்கை திருத்தச் சட்ட மசோதா ஆகியவைகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
கடந்த மாதம் 9 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த நிலையில் தற்போது மேலும் மூன்று மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மொத்தம் 18 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் 12 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளித்துள்ளார். தனியார் பல்கலைக்கழகங்கள் தொடர்பான மசோதாவை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்றுள்ள நிலையில் 5 மசோதாக்கள் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளது.

