போராட்டம் அறிவித்துள்ள ஜாக்டோ ஜியோ அமைப்பினருடன் நாளை அரசு பேச்சுவார்த்தை
ஜாக்டோ ஜியோ கூட்டமைப்புடன் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது, அரசு துறைகளில் காலியாக உள்ள லட்சக்கணக்கான பணியிடங்களை நிரப்புவது ஊதியக்குழு முரண்பாடுகளை களைவது, சிறப்புக் காலமுறை, தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இந்நிலையில் கடந்த 22ம் தேதி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து 2ஆம் கட்டமாக நாளை சென்னை தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்புடன் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ள நிலையில் 2வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.


