ஆசிரியையை கீழே தள்ளி தாலி செயின் பறிப்பு- சென்னையில் பட்டப்பகலில் அரங்கேறிய கொடுமை
சென்னையில் மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஈடுபட்டிருந்த அரசுப் பள்ளி ஆசிரியை கீழே தள்ளி தாலி செயினை மர்மநபர்கள் பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வண்டலூர் அடுத்த மண்ணிவாக்கம் பகுதியைச் சார்ந்தவர் செல்வி (வயது 49). இவர் ஊனமாஞ்சேரியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். விடுமுறை தினமான இன்று மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்காக காலையில் சென்று அவர் பணி முடித்துவிட்டு வண்டலூர் ஜிஎஸ்டி சாலையை வழியாக வண்டலூர் மேம்பாலத்தில் செல்வதற்காக படிக்கட்டு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் நடந்து வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென அவரை கீழே தள்ளி அவர் கழுத்தில் அணிந்து இருந்த ஏழு சவரன் தங்க சங்கிலியை தாலி செயினை அறுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றான். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு திருடனை பிடிக்க சில இளைஞர்கள் முயன்றும் ரயில்வே தண்டவாளம் வழியாக தப்பிச் சென்றான். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

