அரசு பேருந்திலிருந்து கழன்று, சாலையில் ஓடிய சக்கரம்... உயிர் பயத்தில் பயணிகள்

 
பேருந்து

திடீரென அரசு பேருந்திலிருந்து கழன்று, சாலையில் ஓடிய சக்கரம் அருகில் இருந்த சாக்கடையில் விழுந்தது.

தமிழ்நாடு முழுவதும் அரசுப் பேருந்துகள் பழுதடைவதும்,  விபத்துகளில் சிக்குவதும்  அதிகரித்து வருகிறது.  கடந்த மாதம் 24-ஆம் தேதி திருச்சியில் திருவரங்கத்தில் இருந்து கே.கே. நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது,  நடத்துனர் அமர்ந்திருந்த  கடைசியில் இருந்து மூன்றாவது இருக்கை  கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன்  நடத்துனரும் வெளியில்  தூக்கி வீசப் பட்டார். அதற்கு முன் பிப்ரவரி 6-ஆம் தேதி சென்னை அமைந்தகரை பகுதியில் மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார்.

ஏப்ரல் 26-ஆம் தேதி முதல் அரசுப் பேருந்துகள் போர்க்கால அடிப்படையில் பழுது பார்க்கப்பட்டது.  அரசு பேருந்துகளில் இருந்து 17,459 பழுதுகள் கண்டறியப்பட்ட நிலையில்  மே 4-ஆம் தேதி வரை  13,529 பழுதுகள் சரி செய்யப்பட்டன. மீதமுள்ள பழுதுகள் மே 6-ஆம் தேதிக்குள்  சரி செய்யப்பட்டு விட்டதாகவும் தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் அறிவித்திருந்தன.  ஆனால்,  அதன்பின்  அரசுப் பேருந்தின் முன்பக்க சக்கரம் தனியாக கழன்று  ஓடும் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்றுவருகின்றன.

இந்நிலையில் திண்டுக்கல் - பழனி பேருந்து நிலையத்திலிருந்து இன்று காலை 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிய 16 ம் எண் கொண்ட பேருந்து TN57 N 1286, வேப்பன்வலசு பகுதி அருகே சென்றுகொண்டிருந்தபோது, பேருந்தின் முன் இடதுபுற சக்கரம் கழன்று, அருகிலிருந்த சாக்கடையில் விழுந்தது. ஓட்டுநர் சாமர்த்தியத்தால் பயணிகள் நல்வாய்ப்பாக உயிர்பிழைத்துள்ளனர்.