"கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 5 ஆடுகள்" - வெளியானது அரசாணை!
கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கால்நடைத் துறை மானிய கோரிக்கை விவாத முடிவில் அத்துறையின் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த, கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற 38,000 பெண்களுக்கு ரூ.75.63 கோடி செலவில் 5 செம்மறி/வெள்ளாடுகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும் என்று அறிவித்தார். தற்போது அதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது.
இதன்படி தமிழ்நாட்டிலுள்ள 38 ஆயிரம் ஆதரவற்ற பெண்களுக்கு தலா 5 ஆடுகள் என ஒரு லட்சத்து 94 ஆயிரம் ஆடுகள் வாங்க நிதியை ஒதுக்கியுள்ளது அரசு. இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கான நிபந்தனைகள் மற்றும் தகுதிகளையும் அரசு குறிப்பிட்டுள்ளது. பயனாளிகளில் குறைந்தது 30 சதவிகிதம் எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினரைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
நிலங்கள் இல்லாத விவசாய தொழிலாளர்களுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் ஆதரவற்ற பெண்கள் 60 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். குறிப்பாக ஏற்கனவே ஆடுகள், மாடுகள் வைத்திருக்க கூடாது. அதேபோல தகுதிவாய்ந்த பயனாளர்களை தேர்ந்தெடுக்கவும், ஆடுகள் வழங்குவதை கண்காணிக்கவும் கால்நடைத்துறையின் துணை இயக்குநர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.