மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! முன்கூட்டியே தொடங்கும் கோடை விடுமுறை..!
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வாக்குச்சாவடி மையங்கள் வழக்கமாக பள்ளிகளில் அமைக்கப்படும். எனவே, தேர்தல் பணிக்கு பள்ளிகளை ஒப்படைக்கும் வகையிலும், கோடைக்காலம் துவக்கத்திலேயே வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும் இந்தாண்டு கோடை விடுமுறை முன்கூட்டியே அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 2 முதல் 26ஆம் தேதி வரையிலும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் முதல் 27 ஆம் தேதி வரையிலும் தேர்வுகள் நடைபெறுகிறது. அதனைத் தாெடர்ந்து மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
அதேபோல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 11 முதல் ஏப்ரல் 6 ஆம் தேதி வரையில் தேர்வுகள் நடைபெறுகிறது. அதன் பின்னர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் உள்ளிட்ட அதிகாரிகள் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளனர். அதன்படி 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு 3-ஆம் பருவத் தாெகுத்தறி மதிப்பீட்டு முறையில் ஏப்ரல் 6 முதல் 16-ஆம் தேதி வரையில் தேர்வுகள் நடைபெறவுள்ளது.
அதேபோல் 6 முதல் 9ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு 3-ஆம் பருவ தொகுத்தறி மதிப்பீடு மற்றும் இறுதி தேர்வு ஏப்ரல் 1 முதல் 16-ஆம் தேதி வரையில் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து மாணவர்களுக்கு ஏப்ரல் 16 முதல் மே 31ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 23ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கு ஒரு வாரம் முன்பாக பள்ளிகளை தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கும் வகையில் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளித் தேர்வு அனைத்தும் முடிந்த பிறகு பள்ளிகளை தேர்தல் ஆணையத்திடம் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஒப்படைப்பார்கள்.

