மக்களுக்கு குட் நியூஸ்..! ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்..!

 
1

வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் முதல்வர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி,  ஜூன் 21 22ஆம் தேதிகளில் மூன்று உயிரியல் பூங்காவில் நுழைவுக்  கட்டணம்  இலவசம் என  அறிவித்துள்ளார். 

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ரஞ்சித் குமார், ”குழந்தைகள் தான் எங்களுக்கு தெய்வம் போன்றவர்கள். ஜூன் 22ஆம் தேதி முதல்வர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு,  தமிழக அரசின் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்கா, வேலூர் அமிர்தி பூங்கா, சேலம் குரும்பட்டி பூங்காவில் நுழைவுக் கட்டணம் இலவசம்.

ஜூன் 21, 22ஆம் தேதிகளில் இந்த மூன்று உயிரியல் பூங்காவில் நுழைவு கட்டணம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இரண்டு நாட்கள் இலவசம். எந்த ஒரு நுழைவு கட்டணமும் இல்லாமல், வழக்கம் போல் ஆன்லைனில் உங்கள் நுழைவு சீட்டு பெற்றுக் கொள்ளலாம். 

இரண்டு நாட்களுக்கான ஒட்டுமொத்த நுழைவு கட்டணத்தை அரசிடம் இருந்து பெறாமல் எங்கள் குடும்ப அறக்கட்டளையான வாழ் முன் நாயக்கர் அறக்கட்டளை மூலமாக முழுமையாக செலுத்திவிடுவோம். எங்கள் ஆட்சி அமைவதற்கு குழந்தைகளே காரணம். எனவே, அவர்கள் தங்கள் குடும்பத்துடன் கட்டணமின்றி தமிழகத்தில் உள்ள  மூன்று உயிரியல் பூங்காவுக்குள் கட்டணமின்றி செல்லலாம். இது முதல்வர் விஜய்யின் பிறந்தநாள் பரிசாகும்" என தெரிவித்துள்ளார்.

உயிரியல் பூங்காவிற்கு நுழைவு கட்டணம் இலவசம் என வனத்துறை அமைச்சர் அறிவித்ததற்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. திமுக ஐடி விங்  தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, "உயிரியல் பூங்காக்கள் என்ன உங்க அப்பன் வீட்டுச் சொத்தா வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் அவர்களே?
நேற்று 'வெள்ளை அறிக்கை' விட்டு கஜானாவில் காசில்லை என்று கதறிய நீங்கள், இன்று 'இன்ஸ்டா அரசன்' விஜய்யின் பிறந்தநாளுக்காக வண்டலூர் உள்ளிட்ட பூங்காக்களுக்கு 2 நாட்கள் இலவச அனுமதி எனப் பல்லிளிப்பது ஏன்?

இந்த வருவாய் இழப்பை யார் ஈடுகட்டுவது? வாயில்லா ஜீவன்களின் உணவுக்கும், ஊழியர்கள் சம்பளத்துக்கும் யார் பொறுப்பு? முதல்வருக்குப் பிறந்தநாள் என்றால் உங்கள் கட்சி நிதியில காக்கா, அணிலுக்கு கேக் வெட்டி ஊட்டிவிடுங்கள். அதைவிட்டு மக்கள் வரிப்பணத்தில் கைவைக்க உங்களுக்கு என்ன தைரியம்? இந்த 'தத்தி' முதலமைச்சருக்கு ஒரு மண்ணும் தெரியாது என்ற துணிச்சலில் தான் அமைச்சர்களும், 'Shadow CM'ம் சேர்ந்து தமிழ்நாட்டை இப்படிச் சூறையாடுகிறீர்களா?" என பதிவிட்டுள்ளது.