ரேஷன் கார்டுதாரர்களுக்கு குட் நியூஸ்: இந்த முறை புதிய டிசைனில் கிடைக்கப்போகும் பொங்கல் வேட்டி, சேலை..!
2027- ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏழை, எளிய மக்களுக்கு விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்தவும், புதிய தர அளவீடுகளுடன் கூடிய ஆடைகளை உற்பத்தி செய்யவும் தமிழ்நாடு அரசு கொள்கை ரீதியான நிர்வாக அனுமதீயை வழங்கியுள்ளது. இதற்காக முதற்கட்டமாக ரூபாய் 300 கோடி முன்பணமாக ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையை கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறையின் முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ளார்.
கடந்த 2013- 2014- ஆம் ஆண்டுக்குப் பிறகு இலவச வேட்டி, சேலைகளின் தரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்படாத நிலையில், 2027- ஆம் ஆண்டு புதிய நூல் ரகங்கள், அதிக உறுதித்தன்மை, நீடித்த பயன்பாடு மற்றும் பொதுமக்கள் விரும்பும் வகையிலான வடிவமைப்புடன் புதிய வேட்டி, சேலைகள் தயாரிக்கப்படவுள்ளன. சேலைகளில் சில்வர் அல்லது காப்பர் நிற ஜரிகை பார்டரும், வேட்டிகளில் வண்ண பாலியஸ்டர் பார்டரும் இடம்பெறவுள்ளது.
சுமார் 177.64 லட்சம் சேலைகள், 177.22 லட்சம் வேட்டிகள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் கைத்தறி, பெடல் தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு ஆண்டு முழுவதும் தொடர்ந்து வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், 2027 ஜனவரி முதல் ஜூன் வரை ஆறு மாதங்களுக்கு முன்கூட்டியே உற்பத்தித் திட்டத்தை செயல்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதிய தர அளவீடுகளின்படி வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்ய மொத்தம் ரூபாய் 642.88 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், 2027 பொங்கல் திட்டத்தில் இலவச வேட்டி, சேலைகள் தகுதியான பயனாளிகளுக்கே சென்றடைவதை உறுதி செய்ய அரசு புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. நியாய விலைக் கடைகளில் உள்ள POS இயந்திரங்கள் மூலம் வேட்டி, சேலை வழங்கும்போது குடும்ப அட்டைதாரர்களின் கைவிரல் ரேகை (Bio-metric Authentication) பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
குடும்பஅட்டை இல்லாத முதியோர் ஓய்வூதியத் திட்டப் பயனாளிகள் ஆதார் அடிப்படையிலான கைவிரல் ரேகை அல்லது கண் கருவிழி (Iris Authentication) மூலம் அடையாளம் உறுதி செய்யப்பட்ட பிறகு வேட்டி, சேலை பெறலாம். 2026 பொங்கல் திட்டத்தில் எஞ்சியுள்ள பழைய ரக வேட்டி, சேலைகளை, நடப்பாண்டில் தீபாவளி பண்டிகையின்போது முதியோர் ஓய்வூதியத் திட்டப் பயனாளிகளுக்கு வழங்கவும் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் செயலாக்க முகமை அலுவலராக கைத்தறி இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார்.

