குட் நியூஸ்..! விரைவில் ரேஷனில் ஜவ்வரிசி வழங்க தமிழக அரசு திட்டம்..!
Sep 2, 2025, 09:02 IST1756783953569
நாமக்கல் மாவட்டங்களில் அதிகளவில் மரவள்ளி கிழங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. அவ்வப்போது ஜவ்வரிசி விலை குறைந்து விடுவதால், மரவள்ளி கிழங்கு விலை கடுமையாக சரிவடைந்து, விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். அதனால், ஜவ்வரிசி விற்பனையை அதிகரிக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஐக்கிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் சங்கரய்யா கூறியதாவது:
கடந்த 2024 நவம்பரில் சேலத்தில் நடந்த புத்தக திருவிழாவில், ஜவ்வரிசியை ஊக்குவிக்கும் வகையில், 60க்கும் மேற்பட்ட உணவு வகைகள் தயார் செய்து வழங்கப்பட்டன. இவை பொதுமக்கள், சிறுவர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. ரேஷன் கடைகளில் ஜவ்வரிசி வழங்க வேண்டும். மதிப்பூட்டப்பட்ட உணவு பொருளாக பயன்படுத்த வேண்டும் என, தமிழக அரசுக்கு, விவசாய சங்கத்தின் சார்பில் பலமுறை கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
சேலம் சேகோ சர்வ் செயலாட்சியர் கீர்த்தி பிரியதர்ஷினி, ஆகஸ்டில் தொழில் துறை வணிக இயக்குநருக்கு அனுப்பிய கடிதத்தில், 'காலை உணவு திட்டத்தில் ஜவ்வரிசி உணவு பொருளை சேர்க்கவும், நேரடி விற்பனை மையங்கள், ஆவின் விற்பனை மையங்களில் ஜவ்வரிசி விற்பனை செய்யவும், ரேஷன் கடைகளில் ஜவ்வரிசியை வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என தெரிவித்துள்ளார். இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், ஜவ்வரிசி விற்பனை அதிகரிப்பு, கூடுதல் விலை கிடைக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

