குட் நியூஸ்..! இனி 3 வேளையும் கட்டணமில்லா உணவு.. தமிழக அரசு அரசாணை..!
தூய்மை பணியாளர்களுக்கு காலை, மதியம், இரவு என 3 வேளைகளும் இலவச உணவு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதிகாலையிலேயே பணியினை தொடங்கிவிடுவதால் அவர்களால், வீட்டில் காலை மற்றும் மதிய உணவு தயார் செய்ய சிரமம் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளைகளும் இலவச உணவு வழங்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் இந்த நடைமுறை அமல்படுத்தப்படும் என்றும், இதன்பிறகு படிப்படியாக மற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் 14.08.2025 அன்று நடைப்பெற்ற அமைச்சரவைக் கூட்டம், முடிந்த பிறகு நிதித்துறை அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் ஒன்றான தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்குவது குறித்த அறிவிப்பின் விவரம் பின்வருமாறு:
"தூய்மைப் பணியாளர்கள் தங்களது பணியை அதிகாலையில் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையில், காலை உணவு சமைப்பதற்கும், அதை பணிபுரியும் இடத்திற்கு கொண்டு வந்து அருந்துவதற்கும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
இப்பிரச்சனைகளுக்கு தீர்வாக நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு காலை உணவு அந்தந்த உள்ளாட்சி அமைப்புக்களால் இலவசமாக வழங்கப்படும். இத்திட்டம் முதற்கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு, படிப்படியாக மற்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும்". இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தது போல, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அறிவிப்பின் படி தூய்மை பணியாளர்களுக்கு காலை, மதியம், இரவு என 3 வேளைகளும் உணவு வழங்கப்பட உள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மத்திய, வடக்கு மற்றும் தெற்கு வட்டார பகுதிகளில் பணிபுரியும் மொத்தம் 29,455 பணியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்ட இடங்களின் உணவு வழங்கப்படும்.
* காலை 5:30 மணி முதல் 6:00 மணி வரையில், 166 இடங்களில் 5,159 எண்ணிக்கையில் உணவு வழங்கப்பட இருக்கிறது.
* மதிய உணவானது 1:30 மணி முதல் 2:00 மணி வரையில் 285 இடங்களின் 22,886 எண்ணிக்கையிலான உணவு வழங்கப்பட உள்ளது.
* இரவு உணவு 9:30 முதல் 10:00 மணி வரையிலும் வழங்கப்படும். இரவு உணவு 1410 நபர்களுக்கு வழங்கப்படும்.
இந்த உணவுகள் அடுத்த 3 ஆண்டுகளுக்கு வழங்கபட உள்ளது. இதற்காக 186 கோடியே 94 லட்சத்து 22,969 ரூபாய் செலவிடப்பட உள்ளது.


