குட் நியூஸ்..! இன்று முதல் பி.எட். படிப்பில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்..!!

 
college reopen

உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகளில் 900 இடங்கள், 14 அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் 1,140 இடங்கள் என மொத்தமுள்ள 21 கல்வியியல் கல்லூரிகளில் 2,040 இடங்கள் உள்ளன.

இந்த கல்லூரிகளில் 2026-2027-ஆம் கல்வி ஆண்டிற்கான பி.எட் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை ஜூன் 19-ஆம் தேதி முதல் ஜூலை 21-ஆம் தேதி வரை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஜூலை 31-ஆம் தேதி தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும். ஆகஸ்ட் 4-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதிக்குள் மாணவர்கள் தங்கள் விருப்பக் கல்லூரியை தேர்வு செய்யலாம். மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு ஆணை ஆகஸ்ட் 14 ந் தேதி வெளியிடப்படும்.

மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆணையை தங்கள் உள்நுழைவு ID மூலம் www.lwiase.ac.in என்ற இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரியில் சேர வேண்டும். அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் ஆகஸ்ட் 24-ஆம் தேதி தொடங்க உள்ளது.

இதேபோல், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு ஜூன் 19ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். 2026-2027-ஆம் கல்வியாண்டில் 110 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை இடங்கள் 24,334 உள்ளன. இந்த இடங்களில் மாணவர்கள் விருப்பப்பட்ட பாடப்பிரிவுகளில் சேர்வதற்கு ஜூன் 19-ஆம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

அனைத்து முதுநிலை முதலாமாண்டு மாணவர்களுக்கும் ஆகஸ்ட் 19-ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும். விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 4-ஆம் தேதி வெளியிடப்படும். சிறப்பு ஒதுக்கீட்டு கலந்தாய்வு ஆகஸ்ட் 10-ஆம் தேதியும், ஆகஸ்ட் 13-ஆம் தேதி முதல் பிற மாணவர்களுக்கான கலந்தாய்வும் நடைபெறும். மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பித்து இடங்களை தேர்வு செய்து கல்லூரியில் சேரலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.