குட் நியூஸ்..! ஆன்லைனில் வேட்புமனு தாக்கல் செய்ய புதிய செயலி அறிமுகம்..!
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் தேதி வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 23-ந் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து மே மாதம் 4-ந் தேதி தேர்தலுக்கான முடிவு அறிவிக்கப்பட உள்ளது. இதனிடையே இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வரும் மார்ச் 30-ந் தேதி முதல் ஏப்ரல் 7-ந் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது,
இதனிடையே 234 தொகுதிகளிலும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்ய 9 நாட்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது, இதில் 4 நாட்கள் அரசு விடுமுறை நாட்கள் என்பதால் 5 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசமாக உள்ளது. இது அரசியல் கட்சி தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், இந்த தேர்தலில் புதிய முயற்சியாக தேர்தல் ஆணையம் ஆன்லைனில் வேட்புமனுவை தாக்கல் செய்ய புதிய வசதியை கொண்டு வந்துள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் சார்பில் ‘சுவிதா 2.0’ செயலியை அறிமுகம் செய்த தேர்தல் ஆணையம் இந்த செயலி மூலம் வேட்பாளர்கள் ஆன்லைனில் வேட்புமனு தாக்கல் செய்யும் புதிய நடைமுறை அறிவித்துள்ளது,
வேட்புமனு தாக்கல் நடைமுறையை எளிமையாக்க கொண்டுவரப்பட்டுள்ள இந்த நடைமுறையில், வேட்பாளர்கள் தங்கள் மொபைல் எண், வாக்களார் அடையாள அட்டையை பயன்படுத்தி அடிப்படை தகவல்களை தானாகவே பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலரிடம் நேரடியாக சென்று வேட்புமனு தாக்கல் செய்யும்போது ஏற்படும், சிரமங்களை தவிர்க்க இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்த செயலி மூலம், சொத்து விபரங்கள், வழக்குகள் குறித்த பிரமாண பத்திரங்கள் என அனைத்தும் பதிவேற்றம் செய்துகொள்ளலாம்.
விண்ணப்பங்களை நிகழ்நேரத்தில் கண்காணித்து, அனுமதிகள் தொடர்பான எச்சரிக்கைகளை அனுப்புகிறது. இதன் மூலம் தேர்தல் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் நீக்கப்படுகிறது. வேட்புமனு தாக்கலின்போது ஏற்படும் தேவையற்ற மோதல்கள், நெரிசல்களை தவிர்க்க, இந்த ஆன்லைன் வேட்புமனு தாக்கல் பெரும் உதவியாக இருக்கும் என்றும், கூறப்பட்டுள்ளது. அதே சமயம் ஆன்லைனில் வேட்புமனுவை தாக்கல் செய்தாலும் அதன் நகலை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கட்டாயம் சமர்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தேர்தல் பணிகள் அதிக வெளிப்படை தன்மையுடன் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

