குட் நியூஸ்..! இந்திய மாணவர்களுக்கு 8,000 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு..!

 
1

ரஷ்யாவில் அரசு மருத்துவ பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்களுக்கு 5,000ஆக இருந்த மருத்துவ இடங்களை 8,000ஆக அந்நாட்டு அரசு அதிகரித்துள்ளது.மேலும் இந்திய தேசிய மருத்துவ ஆணையத்தின் தற்போதைய விதிமுறைகளை கடைப்பிடிப்பதிலும் இந்திய மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தருவதற்கும் ரஷ்ய அரசு உறுதி பூண்டுள்ளது.

இந்த நிலையில் ரஷ்யாவில் மருத்துவக் கல்வி மேற்கொள்வதற்கான கல்வி கண்காட்சி சென்னை உட்பட முக்கிய நகரங்களில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.மேலும் இன்று ஞாயிற்றுக் கிழமையும் நடைபெறுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மே 11, 12 சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்ய கலாசார மையத்தில் கல்வி கண்காட்சி நடைபெறுகிறது.மே 14ஆம் தேதி மதுரை ரெசிடென்சி ஹோட்டல், 15ஆம் தேதி திருச்சி பெமினா ஹோட்டல், 16ஆம் தேதி சேலம் ஜி.ஆர்.டி.ஸைப் ஹோட்டல், 17ஆம் தேதி கோவை ‘தி கிராண்ட் ரீஜெண்ட்’ ஹோட்டல் ஆகியவற்றில் கல்விக் கண்காட்சி நடக்க உள்ளது.

இந்தக் கண்காட்சிகளில், வோல்கோகிராட் மாநில மருத்துவ பல்கலைக்கழகம், இம்மானுவேல் காண்ட் பால்டிக் பெடரல் பல்கலைக்கழகம், கசான் மாநில மருத்துவ பல்கலைக்கழகம், தேசிய ஆராய்ச்சி நியூக்ளியர் பல்கலைக்கழகம் உள்ளிட்டவை பங்கேற்கின்றன.

இவற்றில், மருத்துவம் (எம்.பி.பி.எஸ்), பொறியியல், தொழில்நுட்ப படிப்புகளுக்கான நேரடி சேர்க்கையும் இடம்பெறுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்று பிளஸ் 2வில் 50 விழுக்காடு மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.