சந்திரயான் 3- விஞ்ஞானிகளின் உயர்பணி இந்தியாவின் வளர்ச்சி, வெற்றி: ஜி.கே.வாசன்

சந்திரயான் 3 வெற்றி- விஞ்ஞானிகளின் உயர்பணி இந்தியாவின் வளர்ச்சி, வெற்றி: ஜி.கே.வாசன் சந்திரயான் - 3 விக்ரம் லேண்டர் இன்று நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கி இருப்பது இந்திய குடிமகன் ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் அளிப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகமே உற்று நோக்கும் இந்த சாதனையை புரிந்த விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். இஸ்ரோவால் செலுத்தப்பட்ட, சந்திராயன் - 3, முழுக்க முழுக்க இந்திய விஞ்ஞானிகளால் வடிவமைத்து, உருவாக்கி, விண்ணில் செலுத்தப்பட்டு இன்று வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி இருக்கிறது. இந்நிகழ்வு விண்வெளி ஆய்வில் உலக நாடுகளுக்கு மத்தியில், இந்தியாவின் சாதனைக்கு, ஒரு மைல் கல்லாக அமைந்திருக்கிறது. அறிவாற்றலிலும், விஞ்ஞானத்திலும், பொருளாதாரத்திலும், தொழில்துறையிலும் உள்கட்டமைப்பு வசதிகளிலும், நிர்வாகத்திலும், நாம் மற்ற நாடுகளுக்கு சலைத்தவர்கள் இல்லை என்று பல்வேறு காலகட்டத்தில் இந்தியா நிருபித்துள்ளது.
கடந்த கொரோனாவின் பெரும் தாக்கத்தில் இருந்து, மக்களை காக்க தடுப்பூசி கண்டுபிடித்து இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலகின் பல நாடுகளுக்கு அளித்து மக்களை காத்ததை நினைவு கூறுகிறேன். சந்திரயான் - 2 விண்கலம் அனுப்பப்பட்டு அவை தோல்வியடைந்த நிலையில், அவற்றில் 2 துவண்டு போகாமல், சந்திரயான் 2ல் ஏற்பட்ட கோளாறுளை கண்டறிந்து, அவை மீண்டும் ஏற்படாதவாறு சந்திராயன் - 3 விண்கலத்தை வடிவமைக்க நமது விஞ்ஞானிகள் கடுமையான பணிகளை மேற்கொண்டு இன்று வெற்றியடைந்து இருக்கிறார்கள். நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை தரை இறக்குவது சவாலான செயல். அதிலும் சாதித்த அவர்களின் வெற்றி இந்தியாவிற்கும், ஏன் உலகிற்கே பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.
சந்திரயான் - 3 விண்கலம், நிலவின் ஆராய்ச்சியில் ஈடுப்பட்டு வருங்கால விஞ்ஞான வளர்ச்சிக்கு வழிகாட்டியாகவும், அடித்தளமாகவும் அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. சந்திரயான்3 விண்கலத்தை உருவாக்கிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், அதிகாரிகளுக்கும், பணியாளர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும், நன்றியையும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.