தி.மு.க அரசை கண்டித்து சென்னையில் மாபெறும் கையெழுத்து இயக்கம் - ஜி.கே. வாசன்

 
GK Vasan

தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணியின் சார்பில் தமிழகத்தில் கள்ளச்சாரயம் விற்பனை மற்றும் போதைப் பொருள்கள் பழக்கம் பெருகி வருவதை தடுக்க தவறிய தி.மு.க அரசை கண்டித்து சென்னையில் மாபெறும் கையெழுத்து இயக்கம் நடத்தப்போவதாக ஜி.கே. வாசன் அறிவித்துள்ளார். 

இதுக்குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  "விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாரயம் குடித்த ஒரு பெண் உட்பட 12 பேர் இறந்துள்ளனர். மேலும் 34 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் மலிவாக, எளிதாக, அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது. இதனால் இளைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது. திமுக தேர்தல் வாக்குறுதியில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம், பூரண மதுவிலக்கே எங்கள் இலக்கு என்று வாக்குறுதி அளித்துவிட்டு 12 மணிநேரம் மதுக்கடைகளை திறந்து வைத்து மக்களை குடிகாரர்களாக ஆக்கிவருவது வேதனைக்குரியது. மதுவின் மூலம் அதிக வருமானம் கிடைக்கிறது என்பதற்காக அரசு நூதன முறையில் மதுவிற்பனையை பரவலாக்கிவருகிறது.

tn

தமிழகத்தில் ஏழை, எளிய, நடுத்தர மக்களையும், இளைஞர்களையும் ஒருபுறம் டாஸ்மாக் மூலமும், மறுபுறம் கள்ளச்சாரயத்தின் மூலமும் அழிவுப்பாதைக்கு அழைத்து செல்லும் நிலையை கண்டித்தும் தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த கோரியும் தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணியின் சார்பில் வருகிற 20.05.2023 ஆம் தேதி சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் சென்னை, தி.நகர், திருமலைப்பிள்ளை சாலையில் உள்ள பெருந்தலைவர் இல்லத்தில், மாபெரும் கையெழுத்து இயக்கம் எனது தலைமையில் நடைபெறுகிறது.

gk

மேலும் 22.05.2023 திங்கள்கிழமை அன்று தமிழகம் முழுவதும் த.மா.கா இளைஞர் அணியின் சார்பில் அந்தந்த மாவட்ட தலைநகர்களில் கையெழுத்து பெறப்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்படுகிறது. இந்நிகழ்வில் த.மா.கா மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், நிர்வாகிகள், துணை அமைப்பு தலைவர்கள், இளைஞர் அணியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பெருமளவில் கலந்துகொள்கின்றனர்." என்று குறிப்பிட்டுள்ளார்.