ஷவர்மா சாப்பிட்டு சிறுமி பலி - உணவகங்களில் ஆய்வு மேற்கொள்ள உத்தரவு!

ஷவர்மா, க்ரில் சிக்கன் சாப்பிட்டு சிறுமி உயிரிழந்ததை தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள உணவகங்களில் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
நாமக்கல்- சந்தைப்பேட்டை புதூர் பகுதியில் வசித்து வருபவர் சுஜாதா (38). இவரது மாமியார் கவிதா (58) மற்றும் குழந்தைகள் கலையரசி(14) பூபதி (12) உறவினர் சுனோஜ் (38) ஆகியோர் குடும்பத்தாருடன் நேற்று முன்தினம் பரமத்தி சாலையில் உள்ள ஐவின்ஸ் என்ற உணவகத்தில் ஷவர்மா பார்சல் வாங்கி வந்து சாப்பிட்டுள்ளார். சாப்பிட்ட சிறிது நேரத்தில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிறுமி கலையரசி நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற 4 பேர் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக உணவக உரிமையாளர் நவீன் குமார் , அங்கு பணிபுரியும் இருவர் உட்பட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நாமக்கல்லில் உள்ள உணவகத்தில் ஷவர்மா கிரில் சிக்கன் சாப்பிட்டு சிறுமி உயிரிழந்ததை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உணவகங்களில் ஆய்வு நடத்த மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு பிறப்பித்துள்ளார். உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படாத தரமற்ற உணவுகளை விற்பனை செய்யும் உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.