செல்ல பிராணிகளை வளர்ப்பவர்கள் கவனத்திற்கு...மாநகராட்சியின் கிடுக்குபிடி

 
tn

ராட்வெய்லர் நாய்கள் கடித்து குதறிய  சிறுமிக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் செலவினை மாநகராட்சி ஏற்றதாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். 

tn
சென்னை ஆயிரம் விளக்கு மாதிரி பள்ளி சாலையில் உள்ள மாநகராட்சி பூங்காவில் காவலாளியாக பணிபுரியும் ரகு என்பவர் தனது மனைவி சோனியா மற்றும் ஐந்து வயது மகள் சுதக்ஷா உடன் பூங்காவில் உள்ள அறையில் வசித்து வருகிறார்.  பூங்காவில் சோனியாவும் , மகளும் நேற்று இருந்துள்ளனர்.  அப்போது அப்பகுதியில் வசிக்கும் புகழேந்தி  என்பவர் தான் வளர்க்கும் இரண்டு நாய்களை அழைத்து வந்துள்ளார்.  அப்போது இரண்டு நாய்களும் சிறுமி சுதக்ஷாவை கடுமையாக கடித்துள்ளது.  சிறுமியின் அலறல்  சத்தம் கேட்டு வந்த தாய் சோனியா நாய்களிடமிருந்து தனது மகளை காப்பாற்ற நினைத்தபோது அவரையும் நாய் கடித்து குதறி உள்ளது . இதைத்தொடர்ந்து சிறுமியை போராடி மீட்டு சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அவரது தாய் அனுமதித்துள்ளார்.  அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இது தொடர்பாக நாயின் உரிமையாளர்  புகழேந்தியை ஆயிரம் விளக்கு போலீசார் கைது செய்துள்ளனர் .

tn


இது தொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் , சிறுமியை கடித்த நாய்களுக்கு உரிமையாளர்கள் வளர்ப்பு உரிமம் பெறவில்லை.  ஏன் உரிமம் பெறவில்லை என கேட்டு உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. நாய்,  பூனை உள்ளிட்ட பிராணிகளை வளர்ப்பவர்கள் கட்டாயம் லைசென்ஸ் பெற வேண்டும். அவற்றுக்கு தவறாமல் தடுப்பூசி செலுத்த வேண்டும். தெருவில் திரியும் நாய்களாக இருந்தாலும், இதற்கு இன கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்து மீண்டும் இருந்த இடத்திலேயே விட வேண்டும் என்று மாநகராட்சிக்கு நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.  இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணைக்கு பின்னர் கால்நடை துறையுடன் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ராட்வெய்லர்  நாய்கள் கடித்துக் குதறிய  சிறுமிக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டும். சிறுமியின் மருத்துவ செலவை மாநகராட்சி ஏற்றுள்ளது. ராட்வெய்லர் நாய்களை வளர்க்க தடை இல்லை என்பதால் பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உரிமம் இருந்தாலும் கூட மற்றவர்களுக்கு நாயால் ஆபத்து இருக்கக் கூடாது என்றார்.