கேட் கீப்பர் பங்கஜ் சர்மா மீது 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு
கடலூர் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தது தொடர்பாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மா மீது 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடலூாில் இயங்கி வரும் ஒரு தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிக்கு சொந்தமான வேன் ஒன்று கடலூர் அருகே உள்ள தொண்டமாநத்தம் பகுதிக்கு மாணவர்களை ஏற்ற சென்றது. வேனை கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்த சின்னபையன் மகன் சங்கர்(வயது 47) என்பவர் ஓட்டினார். வேனில் சின்னகாட்டு சாகை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த திராவிடமணி மகள் 11-ம் வகுப்பு படித்து வரும் சாருமதி, 10-ம் வகுப்பு படித்து வரும் அவரது தம்பி செழியன், தொண்டமாநத்தம் விஜயசந்திரகுமார் மகன் 10-ம் வகுப்பு படித்தும் வரும் விஸ்வேஷ் (15), 6-ம் வகுப்பு படித்து வரும் அவனது தம்பி நிமலேஷ் (12) ஆகிய 4 பேர் ஏறினர். செம்மங்குப்பம் ரெயில்வே கேட் அருகே காலை 7.45 மணிக்கு பள்ளி வேன் வந்தது. அப்போது ரெயில்வே கேட் திறந்து இருந்ததால், சங்கர் வேனை முன்னோக்கி இயக்கி, ரெயில்வே கேட்டை கடந்து செல்ல முயன்றார். அந்த சமயத்தில், விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற பயணிகள் ரெயில் வந்தது. கண்ணிமைக்கும்நேரத்தில் ரெயில் பள்ளி வேன் மீது மோதியது. இதில் ரெயில் என்ஜினுடன் பல அடி தூரத்துக்கு இழுத்து செல்லப்பட்ட வேன் சுக்கு நூறாக உடைந்து பள்ளத்தில் விழுந்தது. இதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தின்போது, ரெயில்வே கேட் மூடப்படாமல் இருந்துள்ளது. ரெயில்வே கேட்டை மூடுவதற்காக இருந்த ரெயில்வே கேட் கீப்பர் கேட்டை மூடவில்லை என கூறப்படுகிறது. அவர் பணியின்போது தூங்கியதில் ரெயில் வரும்போது கேட் மூடாமல் விடப்பட்டு உள்ளது. இது விபத்திற்கான முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, ரெயில்வே கேட் கீப்பர் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தினர். மேலும் பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் அலட்சியமாக செயல்பட்டதாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.


