ஓஎன்ஜிசி குழாயில் இருந்து பயங்கர சத்தத்துடன் வெளியேறிய கேஸ்- உயிர் பயத்தில் அலறிய சிதம்பரம் மக்கள்

 
ட ட

சிதம்பரம் அருகே புவனகிரி பகுதியில் ஓஎன்ஜிசி குழாயில் இருந்து கேஸ் கசிவு ஏற்பட்டு பலத்த சத்தத்துடன் கேஸ் கசிந்ததால் கிராம மக்கள் பீதியடைந்தனர்.

சிதம்பரம் அருகே உள்ள புவனகிரி சுற்று வட்டார பகுதியின் சில இடங்களில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் எண்ணெய் கிணறு குழாய் உள்ளது. இதில் உளுத்தூர் கிராமத்தில் உள்ள வயல்வெளி பகுதியிலும் ஒரு கேஸ் குழாய் உள்ளது. பல மீட்டர் ஆழத்தில் எரிவாயு எடுக்கப்பட்டு, குழாய் மூலம் புவனகிரி அருகே பெருமாத்தூரில் உள்ள ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு செல்கிறது. பின்னர் அங்கிருந்து கேஸ் பிரித்தெடுத்து அனுப்பப்படுகிறது. இந்நிலையில் உளுத்தூர் கிராமத்தில் உள்ள குழாயில் இருந்து இன்று இரவு திடீரென பயங்கர சத்தம் கேட்டது. பின்னர் அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் அங்கு சென்று பார்த்தபோது நாற்றத்துடன் வாயு கசிவு ஏற்பட்டது தெரிய வந்தது. பயங்கர சத்தம் மற்றும் கேஸ் கசிவு ஏற்பட்டதால் உளுத்தூர் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்து கடும் பீதிக்கு உள்ளாகினர்.

இதையடுத்து கிராம மக்கள் இந்த சம்பவம் குறித்து மருதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மருதூர் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் சேத்தியாத்தோப்பு தீயணைப்புத் துறை வீரர்களும் சம்பவ இடத்திற்கு வந்து அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் எண்ணெய் கிணறு அருகே பணியில் இருந்த ஊழியர் ஒருவர் உடனடியாக பெருமாத்தூரில் உள்ள ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்தார். அப்போது அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் உடனடியாக அங்கிருந்தபடியே இந்த கேஸ் கசிவை சரி செய்தனர். இதையடுத்து உளுத்தூர் கிராமத்தில் இருந்த எரிவாயு குழாயின் வால்வில் இருந்து வெளியான சத்தமும், வாயு கசிவும் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கியது. இதனால் உளுத்தூர் கிராமத்தில் சுமார் 1 மணி நேரமாக பீதியிலும், பதற்றத்திலும் இருந்த கிராம மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். பின்னர் இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிதம்பரம் போலீஸ் டிஎஸ்பி பிரதீப் இதுகுறித்து விசாரணை நடத்தினார்.   

இந்த சம்பவம் குறித்து கூறிய உளுத்தூர் கிராம மக்கள், கேஸ்  குழாயில் இருந்து பயங்கர சத்தம் கேட்டதாகவும், வெடி வெடித்த சத்தம்போல் இருந்ததால் அதிர்ச்சி அடைந்து அங்குசென்று பார்த்தபோது, பயங்கர சத்தத்துடன் வாயு கசிந்ததாக அதிர்ச்சியுடன் கூறிய இக்கிராம மக்கள், இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததும் அவர்கள் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் படிப்படியாக வாயு கசிவு நிறுத்தப்பட்டது. இதனால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என கூறினர்.