செப்., 30 வரை குழந்தைகளுக்கு இலவச ஆதார்..!!

 
Q

நாடு முழுவதும் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்குப் புகைப்படம் மற்றும் அடிப்படை விவரங்கள் மட்டும் கொண்டு ’பால் ஆதார் அட்டை’ (Baal Aadhaar) வழங்கப்படுகிறது. இவர்களுக்கு கைரேகை மற்றும் கருவிழி பதிவு செய்யப்படுவதில்லை.

இவர்கள் 5 வயதைக் கடக்கும்போது ஆதார் மையங்களுக்கு நேரடியாகச் சென்று கைரேகைகள், கருவிழிகள் மற்றும் பிற பயோமெட்ரிக் விவரங்களை பதிவு செய்வது அவசியம். பின்னர், 15 வயதில் மீண்டும் பயோ-மெட்ரிக்கை அப்டேட் செய்ய வேண்டும்.

இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 2025 ஆம் ஆண்டு, பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று மாணவர்களின் பயோ-மெட்ரிக்களை அப்டேட் செய்யும் பணிகளை மத்திய அரசு தொடங்கியது.

மாநில அரசுகளுடன் ஒன்றிணைந்து இதுவரை 1.56 லட்சம் பள்ளிகளில் ஆதார் புதுப்பிப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, இதுவரை 2 கோடி மாணவர்களுக்கு ஆதார் பயோ-மெட்ரிக் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

5 வயது முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கு, செப்டம்பர் 30 ஆம் தேதி வரை பயோமெட்ரிக்கை புதுப்பிக்க இலவசம்.

கடந்த செப்டம்பர், 2025 முதல் ஓராண்டுக்கு பயோ-மெட்ரிக் புதுப்பிப்பு கட்டணத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆதார் பயோ-மெட்ரிக்கை எங்கே புதுப்பிக்கலாம்?

ஆதார் பயோமெட்ரிக் புதுப்பிப்பை இணையவழியாக செய்ய முடியாது. குழந்தைகளை பெற்றோர் ஆதார் மையத்துக்கு அழைத்துச் சென்றுதான் புதுப்பிக்க முடியும்.

அருகிலுள்ள ஆதார் மையத்தை 'புவன் ஆதார் போர்டல்' (Bhuvan Aadhaar Portal) மூலம் கண்டறியலாம்.

ஆதார் அட்டையை அப்டேட் செய்ய குழந்தைகளின் ஆதார் அட்டையுடன், குழந்தையையும் ஆதார் மையத்துக்கு பெற்றோர் அழைத்துச் செல்ல வேண்டும்.

குழந்தைகளின் கைரேகைகள், கருவிழிப் படலம் மற்றும் புகைப்படம் ஆகியவை பதிவு செய்யப்படும்.

புதுப்பித்த பின்னர், ஆதார் மையத்தில் 'புதுப்பிப்பு கோரிக்கை எண்' (URN) அடங்கிய ஒப்புதல் சீட் வழங்கப்படும். அதிலுள்ள எண்ணை பயன்படுத்தி கோரிக்கையின் நிலையை அறியலாம்.

நாடு முழுவதும் இதுவரை 2 கோடி பள்ளி மாணவர்களின் ஆதார் பயோ-மெட்ரிக் புதுப்பிக்கப்பட்டுள்ளது. வருகின்ற செப்., 30 ஆம் தேதி வரை, 5 முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்குப் பயோ-மெட்ரிக் புதுப்பிப்பு இலவசமாக மேற்கொள்ளப்படும். இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்