தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சகோதரர் என்.ஜே. வாசுதேவன் காலமானார்..!!
முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் மூத்த சகோதரர் என்.ஜே. வாசுதேவன், கர்நாடகாவின் மைசூருவில் செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 92.
வயது முதிர்வு தொடர்பான நோய்களால் அவதிப்பட்டு வந்த வாசுதேவன், பன்னூர் நகரம், சாமனஹள்ளியில் உள்ள தனது வளர்ப்பு மகளின் வீட்டில் உயிரிழந்தார். கடந்த சில நாட்களாக அவர் சிகிச்சை பெற்று வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடகா மாநிலம், மாண்டியா மாவட்டம், மேலுகோட்டேவை சேர்ந்தவர் ஜெயராம்; ஜமீன்தாரராக இருந்தார். இவருக்கு ஜெயம்மாள் மற்றும் வேதவள்ளி என்ற சந்தியா என, இரண்டு மனைவியர் இருந்தனர். முதல் மனைவி ஜெயம்மா, ஜெயராம் தம்பதியின் ஒரே மகன் வாசுதேவன். இரண்டாவது மனைவி சந்தியா. இவரது மகள் தான் ஜெயலலிதா. உறவு முறையில் வாசுதேவனும், ஜெயலலிதாவும் அண்ணன் - தங்கை. எனினும், இவர்கள் இடையே நெருங்கிய பந்தம் இல்லை. தன் தங்கை ஜெயலலிதா, தமிழக முதல்வராக இருந்த போது, அவரை சந்திக்க இரண்டு முறை வாசுதேவன், நீலகிரி மாவட்டம், கோடநாடு சென்றார். ஆனால், அவரால் ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை. வாசுதேவன், மைசூரின் பன்னுாரு அருகில் உள்ள சாமனஹள்ளியில் தன் வளர்ப்பு மகள் பவித்ரா, மருமகன் மற்றும் பேரப்பிள்ளைகளுடன் வசித்து வந்தார். வயது முதிர்வு காரணமாக வாசுதேவன் நேற்று காலமானார்.

