கரடி தாக்கி முன்னாள் ராணுவ வீரர் பலி

 
ச்

ஆண்டிபட்டி அருகே கரடி  தாக்கியதில்  இருசக்கர வாகனத்தில் சென்ற முன்னாள் ராணுவவீரர்  உயிரிழந்தார்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலைக்குண்டு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை  கிராமமான  சிதம்பரம் விலக்கு பகுதியை சேர்ந்தவர் சென்றாய பெருமாள். 60 வயதான இவர், 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர். தனது மனைவியோடு சிதம்பரம் விளக்கு பகுதியில் உள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வந்த இவர், நேற்று இரவு வீட்டிற்கு பொருட்கள் வாங்கிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி  செல்லும்போது திடீரென மலைப்பகுதியில் இருந்து வந்து தாக்கிய கரடி ஒன்று கடித்து தாக்கியுள்ளது.

இதில் கண்,முகம், தலை, மார்பு உள்ளிட்ட உடல் முழுவதும் படுகாயம் அடைந்து சென்றாய பெருமாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை காலையில் தோட்டத்து வேலைக்கு அப்பகுதிக்கு சென்ற வர்கள் பார்த்து கொடுத்த தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற மயிலாடும்பாறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவரது உடலை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மயிலாடும்பாறை காவல்துறையினர் மற்றும் கண்டமனூர் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கரடி தாக்கி முன்னாள் ராணுவ வீரர் பலியான சம்பவம் ஆண்டிபட்டி கடமலைக்குண்டு மலை கிராம பகுதிகளில் பரபரப்பையும் அச்சத்தையும்  ஏற்படுத்தி உள்ளது.