மகனை அமைச்சராக்கியது, கடலில் பேனா வைப்பதே மு.க.ஸ்டாலினின் சாதனை - ராஜேந்திர பாலாஜி

 
rajendra balaji

அதிமுக திட்டங்களை நிறுத்தியது மட்டுமே விடியல் ஆட்சியின் சாதனையாக உள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார். 

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி அதிமுக சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுக்கூட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களுக்கு மூடுவிழா நடத்திய அரசு திமுக அரசு. திமுக ஆட்சியில் புதிதாக எந்த திட்டமும் கொண்டு வரவில்லை ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில் அதிமுக கொண்டு வந்த தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை உள்ளிட்ட ஏழை எளிய மக்களுக்கான திட்டங்களை நிறுத்தியுள்ளது. அதிமுக திட்டங்களை நிறுத்தியது மட்டுமே விடியல் ஆட்சியின் சாதனையாக உள்ளது. எழுதாத பேனாவிற்கு சிலை வைப்பது, மகனை அமைச்சராக்கியது மட்டுமே முதல்வர் ஸ்டாலினின் சாதனை. கலைஞருக்கு நினைவு மண்டபம் அமைப்பது நியாயம். ஆனால், கடலுக்கு நடுவே பேனா வைப்பது தவறு.

ஈரோடு இடைத்தேர்தலில் 44 ஆயிரம் வாக்குகள் பெற்றதே அதிமுகவிற்கு மிகப்பெரிய வெற்றி. ஈரோடு தேர்தலில் மக்களை கூண்டுக்குள் அடைத்து வைத்து வாக்குகளை பெற்றனர். ஈரோடு தேர்தலில் ஆளை விட்டால் போதும் என நினைத்து திமுக கூட்டணிக்கு மக்கள் வாக்களித்துள்ளார். ஈரோடு தேர்தலில் பெற்ற வெற்றி உண்மையான வெற்றியல்ல. சந்தில் சிந்து பாடி ஆட்சிக்கு வந்த திமுக மக்களுக்காக எதுவும் செய்ததில்லை. இவ்வாறு கூறினார்.