பாஜகவின் செயல் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் உள்ளது - ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி

 
jayakumar

எடப்பாடி பழனிசாமியின் உருவப்பொம்மையை எரித்தவரை மீண்டும் கட்சியில் சேர்ப்பதா? என தமிழக பாஜகவுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். 

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நாடாளுமன்ற தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம். ஈரோடு கிழக்கு தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்காது. நீட்டை ஒழிக்கிறோம், அதற்கான ரகசியம் எங்களுக்கு மட்டும் தான் தெரியும் என்றார். 22 மாதங்களுக்குப் பிறகும் ரகசியம் சொல்லாமல் மக்களை ஏமாற்றுகின்றனர். திமுக எம்.பி-க்கே பாதுகாப்பு இல்லாதபோது மக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும். திருச்சி காவல்நிலையத்தில் புகுந்தே திமுகவினர் தாக்குதல் நடத்துகின்றனர். 

குரங்கு கையில் சிக்கிய பூமாலை போல திமுக கையில் சட்டம் ஒழுங்கு சிக்கி தவிக்கிறது. தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறை சீர் கெட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி உருவப்பொம்மையை எரித்ததால் நீக்கப்பட்டவரை மீண்டும் கட்சியில் சேர்ப்பதா?. பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டக்கூடாது. பாஜகவின் செயல் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போலாகிறது என பாஜகவுக்கு ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.