கேரளாவில் சிகிச்சை பெற்று வந்த கென்ய முன்னாள் பிரதமர் மரணம்..!
Oct 16, 2025, 04:50 IST1760570445000
கென்யா நாட்டின் முன்னாள் பிரதமர் ரைலா ஒடிங்கா (வயது 80). இவர் 2008 முதல் 2013-ம் ஆண்டு வரை கென்யாவின் பிரதமராக செயல்பட்டுள்ளார்.இதனிடையே, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ரைலா ஒடிங்கா ஆயுர்வேத சிகிச்சை பெற கேரளா மாநிலத்துக்கு வந்திருந்தார். அவர் எர்ணாகுளத்தில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், ரைலா ஒடிங்கா நேற்று காலை ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். அவரை மீட்ட உடன் இருந்தவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ரைலா ஒடிங்காவை பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அறிவித்தனர். இதையடுத்து ரைலா ஒடிங்காவின் உடல் கென்யாவுக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.


