முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு சவுக்கு சங்கர் சரமாரி கேள்வி..?

 
1

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாங்கிய நிலம் குறித்த விவகாரம் கடந்த சில நாட்களாக சூடுபிடித்துள்ளது. ரூ.80 கோடி மதிப்பிலான நிலம் வாங்கியதாகப் பரப்புரைகள் எழுந்த நிலையில், அதற்கான விளக்கத்தை அண்ணாமலை தனிப்பட்ட அறிக்கையிலே வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இயற்கை விவசாயம் தொடர்பான ஆர்வமும், அதனை முன்னெடுக்க தனது "We the Leaders" அறக்கட்டளை மேற்கொண்டுவரும் முயற்சிகளும் காரணமாக, கடந்த ஜூலை 12ஆம் தேதி விவசாய நிலம் வாங்கியதாக தெரிவித்துள்ளார். அந்த நிலத்தை அவர் தனது சேமிப்புகள், மனைவியின் சேமிப்புகள் மற்றும் வங்கிக் கடன் மூலமாக பெற்றதாகவும், கடந்த இரண்டு மாதங்களாக அந்தக் கடனுக்கான வட்டியை முறையாகச் செலுத்திவருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நிலம் பதிவு செய்யப்பட்ட நாளில் அவர் நேரில் செல்லவில்லை என்ற குற்றச்சாட்டை மறுத்த அண்ணாமலை, "ஒரு அசையாச் சொத்தை பவர் ஆஃப் அட்டர்னி மூலம் வாங்க முடியும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளார். காளப்பட்டி பதிவு அலுவலகத்தில், தனது மனைவி அகிலா தனது சார்பாக பவர் ஆஃப் அட்டர்னி அடிப்படையில் நிலத்தைப் பதிவு செய்ததாகவும் விளக்கமளித்துள்ளார்.


மேலும், அந்த நிலத்துக்கான பதிவு, முத்திரைத்தாள் கட்டணம், பத்திரப் பதிவு கட்டணம் என மொத்தம் ரூ.40 லட்சத்து 59 ஆயிரத்து 220 செலுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். இதோடு, பால் பண்ணை அமைப்பதற்காக மத்திய அரசின் பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (PMEGP) கீழ் கடனுக்கான விண்ணப்பமும் செய்துள்ளதாகவும், அது தற்போது பரிசீலனையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அந்த பண்ணை தொடர்பான விவரங்கள் அடுத்த ஆண்டு தாக்கல் செய்யப்படவுள்ள வருமானவரி அறிக்கையில் இடம்பெறும் எனவும் தெரிவித்தார்.


தனது குடும்பத்திற்காக சட்டப்படி வணிக முன்னெடுப்புகளை மேற்கொள்வதாகவும், சமூக நிறுவனம் மற்றும் சிறு தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கான திட்டத்திலும் ஈடுபட்டு வருவதாகவும் அவர் விளக்கமளித்தார். மேலும், "நான் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலிலும் நேர்மையும் உண்மையும் உள்ளது. குறை கூறுபவர்களுக்கு எனது நன்றிகள். வீணான குற்றச்சாட்டுகளை விடுத்து பயனுள்ள காரியங்களில் ஈடுபடுங்கள்" எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

 

சவுக்கு சங்கர் கேள்வி

இந்நிலையில், இந்த நிலம் வாங்கிய விவகாரம் தொடர்பாக சமூக ஆர்வலர் சவுக்கு சங்கர் பல கேள்விகளை எழுப்பியுள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அவர், பால் பண்ணை அமைப்பது PMEGP திட்டத்தின் கீழ் சேவை பிரிவில் வருவதாகவும், ஆனால் அதில் அனுமதிக்கப்படும் அதிகபட்ச கடன் தொகை ரூ.20 லட்சம் மட்டுமே எனவும் குறிப்பிட்டுள்ளார்.


அவர் "40 கோடி மதிப்புள்ள நிலத்தை வாங்கும் ஒருவருக்கு ரூ.20 லட்சம் கடனுக்காக ஏன் காத்திருக்க வேண்டும்? PMEGP திட்டம் வேலை இல்லாதவர்களுக்கான வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டமாகும். அண்ணாமலை உண்மையில் வேலை இல்லாதவரா?" என்ற கேள்விகள் இடம்பெற்றுள்ளன.

 

அண்ணாமலை புதிய சர்ச்சை

இதனால், அண்ணாமலை வாங்கிய நிலம் குறித்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பக்கம் அண்ணாமலை தனது நடவடிக்கைகள் அனைத்தும் சட்டப்படி, வெளிப்படையாக மேற்கொள்ளப்பட்டவை என வலியுறுத்த, மறுபக்கம் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.