வனப்பகுதியில் வசிக்கும் பூர்வகுடிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றம்

 
வனத்துறை

ஒகேனக்கல் அருகே வனப்பகுதியில் குடியிருக்கும் பூர்வகுடிகளை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினரால் பரபரப்பு ஏற்பட்டது. வீட்டை உடைத்து பெண்கள், குழந்தைகளை வனத்துறை அதிகாரிகள் வெளியேற்றினர்.

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதியில் பல வருடங்களாக குடியிருக்கும் பூர்வீக குடிமக்களை ஆக்கிரமிப்பு என கூறி ஆண் பெண் பாராமல் வனத்துறை அதிகாரிகள் வெளியேற்றினர். இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் ஒகேனக்கல் வனப்பகுதி பூர்வகுடி மக்களை, தமிழக வனத்துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றும் செய்தியும் காணொளிகளும், மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. பூர்வகுடி மக்களின் உடைமைகளைத் தூக்கி எறிந்தும், கூரையைப் பிரித்து எறிந்தும், பெண்கள், குழந்தைகள் என்று கூடப் பாராமல், பலவந்தமாக வெளியேற்றியிருக்கின்றனர்.


மக்களின் பணத்தை ஊழல் செய்து கொள்ளையடிப்பவர்களையும், கள்ளச்சாராயம், போதை மருந்து கடத்துபவர்களையும் கண்டுகொள்ளாத திமுக அரசு, ஏழை எளிய மக்களின் மீது மட்டும் தங்கள் அதிகாரத்தைக் காட்டி மிரட்டி வருகிறது. வனப்பகுதி, பூர்வகுடி மக்களுக்கானது. அவர்களுக்கு முறையான வீட்டு வசதி ஏற்படுத்திக் கொடுக்காமல், அதிகார துஷ்பிரயோகம் செய்து அகற்றும் திமுக அரசின் இந்த அடக்குமுறைக்கு, வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.